அவுஸ்திரேலியாவில் பாலூட்டி விலங்கிற்கு பரவிய ஆபத்தான பறவைக் காய்ச்சல்!
அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக பாலூட்டி விலங்கு ஒன்றுக்கு H5N1 பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெற்கு அவுஸ்திரேலியா மாநிலத்தில் உள்ள பீச்போர்ட் கடலோரப் பகுதியில் இறந்து கிடந்த நீண்ட மூக்கு ஃபர் சீல் என்ற கடல் பாலூட்டி ஒன்றின் உடலில் இந்த கொடிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் அவுஸ்திரேலியாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ், முதன்முதலில் இடம்பெயரும் கடல் பறவைகளிடம் கண்டறியப்பட்டது.

தொடர்ந்து உள்ளூர் பறவைகளுக்கும் பரவிய நிலையில், தற்போது கடல் பாலூட்டியான சீல் வரை பரவியுள்ளது.
இறந்து கிடந்த சீல் உடலின் வெளிப்புறத்தில் எந்தக் காயங்களும் இல்லை எனவும், பிற கடல் பாலூட்டிகள் இதனால் பாதிக்கப்பட்டது போல் உடனடியாகத் தெரியவில்லை என்றும் அவுஸ்திரேலிய விவசாயத் துறை அமைச்சர் ஜூலி காலின்ஸ் தெரிவித்துள்ளார்.
பாறைப் பகுதிகளில் கடல் பறவைகளுக்கு மிக அருகில் வாழும் இயல்புடையதால், சீல் போன்ற விலங்குகளுக்கு இந்த வைரஸ் மிக எளிதாகப் பரவும் வாய்ப்புள்ளதாகத் தலைமை கால்நடை அதிகாரி ஸ்கை ஃப்ரூகன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2025-ஆம் ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவின் சப்-அண்டார்டிக் தீவான ஹெர்ட் தீவில் இந்த வைரஸ் பரவியதில் 13,000-க்கும் மேற்பட்ட குட்டி சீல்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியா முழுவதும் இதுவரை 297 வழக்குகள் பதிவாகியுள்ள போதிலும், நாட்டின் கோழிப் பண்ணைகளிலோ அல்லது விவசாயத் துறையிலோ இந்த வைரஸ் இதுவரை கண்டறியப்படவில்லை என ஃபெடரல் அரசு அறிவித்துள்ளது.