அவுஸ்திரேலிய தேர்தல்... ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் தொழிற் கட்சி

Arbin
Report this article
அவுஸ்திரேலியாவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில், ஸ்காட் மோரிசன் தலைமையில் கன்சர்வேட்டிவ் அரசாங்கம் நான்காவது முறை ஆட்சியை கைப்பற்றுமா என்பதை முடிவு செய்ய உள்ளது.
அவுஸ்திரேலியாவின் 17 மில்லியன் வாக்காளர்களில் சரிபாதி பேர்கள் ஏற்கனவே வாக்களித்துள்ளனர். இந்த நிலையில், சனிக்கிழமை வாக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
வெளிவரும் கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில், Anthony Albanese தலைமையிலான தொழிற் கட்சியே ஆட்சியை கைப்பற்றும் என கூறப்படுகிறது.
2019 தேர்தலில் தொழிற் கட்சியை ஆட்சியை கைப்பற்றும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் வெளியான நிலையில் மோரிசன் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி கூட்டணி அரசாங்கத்தை அமைத்தது.
151 உறுப்பினர்கள் கொண்ட அவையில் 76 உறுப்பினர்களுடன் ஆட்சியை தக்கவைத்தது கன்சர்வேட்டிவ் கட்சி. மேலும், சட்டவிரோதமாக படகுகளில் அவுஸ்திரேலியாவுக்குள் குடியேற முயற்சிப்பவர்களை தமது அரசாங்கம் தடுத்து நிறுத்தியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள மோரிசன், இதனால் மக்கள் தங்களுக்கே வாக்களிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் இலங்கையில் இருந்து புறப்பட்டதாக கண்டறியப்பட்ட படகு ஒன்று அவுஸ்திரேலிய எல்லைப் படையால் தடுத்து நிறுத்தப்பட்டு, விசாரணை முன்னெடுக்கப்பட்டதை பிரதமர் மோரிசன் சுட்டிக்காட்டியுள்ளதுடன், தொழிற் கட்சி ஆட்சிக்கு வரும் எனில் அவர்கள் இந்த விவகாரத்தில் கடுமையாக நடந்துகொள்ள மாட்டார்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவுஸ்திரேலிய இந்தியப் பெருங்கடல் பகுதியான கிறிஸ்மஸ் தீவுக்கு அருகே 15 பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று சனிக்கிழமை காலை அவுஸ்திரேலிய எல்லைப் படையால் இடைமறிக்கப்பட்டது.
இவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் என்றே உள்ளூர் நாளேடு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், அவர்கள் புறப்பட்ட இடத்திற்கே திருப்பி அனுப்படும் என மோரிசன் அரசாங்கம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.