கோழி இறக்குமதிக்கு விதித்த தடை விரைவில் தளர்த்தப்படும் ; பிரேசில் நம்பிக்கை!
பிரேசில் கோழிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சீனாவும் பிற நாடுகளும் அவற்றை இறக்குமதி செய்ய விதித்த தடையை விரைவில் தளர்த்தும் என அந்நாட்டு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
உலகளவில் அதிகளவில் கோழிகளை ஏற்றுமதி செய்யும் நாடாக பிரேஸில் விளங்குகின்றது. எவ்வாறு இருப்பினும் அண்மையில் பிரேசிலில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் பறவைக் காய்ச்சல் பரவியதையடுத்து அந்நாட்டின் கோழிப்பண்ணைத் தொழில் வளர்ந்து வருகின்றது.
உலகளவில் அதிகளவில் கோழிகளை ஏற்றுமதி செய்யும் பிரேசிலின் தெற்குப் பகுதியில் பறவைக் காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த முடிந்தால், ஜப்பான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு சிற்றரசுகள் ஆகிய நாடுகளைப் போல் சீனாவும் குறிப்பிட்ட மாநிலத்தின் கோழிகளுக்கு மட்டும் தடை விதிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
உலகளாவிய தேவை மிகவும் வலுவாக இருப்பதால், விரைவில் சில தளர்வுகள் இருக்கும் என்று பிரேசிலின் விவசாய அமைச்சின் அனைத்துலகச் செயலாளர் லுயிஸ் ருவா கூறினார்.
மேலும், ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை நீண்டகாலத்திற்குத் தொடராமல் இருக்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும் அரசு எடுப்பதாகவும் உடனுக்குடன் அதுகுறித்த தகவல்களைப் பகிர்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
உலக வர்த்தகத்தில் பிரேசிலின் கோழி ஏற்றுமதி 35 விழுக்காட்டிற்கும் அதிகமாக உள்ளது.
இதனால், பிரேசிலுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை அந்நாட்டு விவசாயிகளுக்கு மட்டுமன்றி, முக்கிய இறக்குமதியாளர்களுக்கும் வேதனை அளிப்பதாகக் கூறப்படுகிறது.
சீனாவால் இறக்குமதி செய்யப்படும் கோழிகளில் பெரும்பாலானவை பிரேசிலிலிருந்து வருவதாகவும் மீதமுள்ளவற்றில் பெரும்பாலானவை அமெரிக்காவிலிருந்து வருவதாகவும் பிரேசில் விவசாய அமைச்சர் கார்லோஸ் ஃபாவாரோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.