ஹோர்முஸ் நீரிணை முடக்கம் ; உலகளாவிய எரிசக்தி போர்
ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் போர் 6-வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து 95% முடங்கியுள்ளது.
இதன் விளைவாக உலகெங்கும் எரிபொருள் விலை விண்ணை முட்டியுள்ள நிலையில், எகிப்து உள்ளிட்ட பல நாடுகள் மின்சார சேமிப்பு மற்றும் எரிபொருள் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.
உலகின் எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு (LNG) தேவையில் ஐந்தில் ஒரு பங்கு பூர்த்தி செய்யப்படும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளதால், சர்வதேச சந்தை கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது.

போர் தொடங்குவதற்கு முன் 65 டொலராக இருந்த மசகு எண்ணெய் விலை, தற்போது ஒரு பீப்பாய்க்கு 109 டொலராக உயர்ந்துள்ளது. உலகின் மிகப்பெரிய LNG நிலையமான கத்தாரின் ராஸ் லஃபான் மீது ஈரான் நடத்திய தாக்குதலால், அதன் ஏற்றுமதி திறன் 17% பாதிக்கப்பட்டுள்ளது.
இது ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்கான எரிவாயு விநியோகத்தில் பாரிய தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.
எரிபொருள் இறக்குமதிச் செலவு மார்ச் மாதத்தில் 2.5 பில்லியன் டாலராக உயர்ந்துள்ள நிலையில், எகிப்து பிரதமர் முஸ்தபா மட்பூலி பின்வரும் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்:
கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்கள் இரவு 9 மணிக்குள் மூடப்பட வேண்டும் (வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 10 மணி வரை).
ஏப்ரல் 1 முதல், தகுதியுள்ள அரசு ஊழியர்கள் வாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டிலிருந்தே பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 30% குறைக்கப்பட்டுள்ளதுடன், தெரு விளக்குகளின் பயன்பாடு 50% வரை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க பாகிஸ்தான், மலேசியா மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

சந்தைகள் இரவு 8 மணிக்கும், உணவகங்கள் மற்றும் திருமண நிகழ்வுகள் இரவு 10 மணிக்கும் முடிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்றவும், நான்கு நாள் வேலை வார முறையையும் இந்நாடுகள் அறிமுகப்படுத்தியுள்ளன.
எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலையேற்றத்தைச் சமாளிக்க எரிபொருள் பங்கீட்டு முறை (Fuel Rationing) மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து முடக்கப்பட்டால், உலகப் பொருளாதாரம் "கற்காலத்தை" நோக்கித் தள்ளப்படும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.