கியூபெக் ஹெலிகாப்டர் விபத்தில் காணாமல் போன மூவர் சடலங்களாக மீட்பு
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட மருத்துவ ஹெலிகாப்டர் விபத்தில் காணாமல் போன மூன்று நபர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஒரு ஏரியில் இருந்து இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக எயார்மெடிக் Airmedic நிறுவனம் மற்றும் மாகாண காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளனர்.
வாட்சியோவ் ஏரி Lake Watshishou பகுதியில் மூன்று சடலங்களை பொலிஸார் புதன்கிழமை இரவு அடையாளம் கண்டுள்ளனர்.
இது மொன்ரியாலில் இருந்து 1,000 கிலோமீட்டர்கள் வடகிழக்கில் அமைந்துள்ள இடம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உறுதிப்படுத்தல் எங்கள் குழுவை மிக மிகக் கவலைக்குள்ளாக்கியது என எயார்மெடிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஹெலிகாப்டர், கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவ ரீதியாக ஒரு நோயாளியை எடுத்துச் செல்லும் வேளையில் விபத்தில் சிக்கியது.
அந்த நேரத்தில் ஒரு ஆண் குழு உறுப்பினர் மட்டும் பாதுகாப்பாக மீட்கப்பட்டார், அவருக்கு உயிருக்கு ஆபத்தில்லாத காயங்கள் ஏற்பட்டிருந்தன.
மீட்கப்பட்ட மூவரில் இருவர் மருத்துவக் குழுவினரான ஊழியர்கள் எனவும் மற்றும் ஒருவர் நோயாளி எனவும் தெரிவிக்கப்படுகின்றது.