பிரித்தானியாவில் ஊரடங்கு தளர்வுகள் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிட்ட பொரிஸ் ஜோன்சன்
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் ஓராண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. ஒரு சில நாடுகள் மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டு வந்துள்ள நிலையில் பல நாடுகளில் கொரோனா வைரஸின் புதிய, புதிய அலைகள் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.
பிரித்தானியாவில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா மாறுபாடு கொரோனா வைரஸ் அங்கு வேகமாக பரவி வருகிறது. அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை இருந்து வருகிறது.
இந்தப் புதிய பாதிப்புகளில் 90 சதவீதம் டெல்டா மாறுபாடு கொரோனா வைரஸ் என்று பிரித்தானிய சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இதனிடையே பிரித்தானியாவில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முன்னர் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளை வருகிற 21ஆம் திகதியுடன் முடிவுக்கு கொண்டுவர அரசு திட்டமிட்டிருந்த சூழலில், கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே பிரதமர் பொரிஸ் ஜோன்சன் மேலும் 4 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்துள்ளார்.
அதாவது, வரும் ஜூலை 19 ஆம் திகதிக்கு பிறகே ஊரடங்கில் தளர்வுகள் இருக்கும் என்று பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். கொரோனா வேகமாக பரவும் சூழலில் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை மேலும் பலருக்கு செலுத்த அனுமதிக்கும் வகையில் தளர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள போரிஸ் ஜான்சன், ஊரடங்கை மேற்கொண்டு நீட்டிக்க வேண்டிய அவசியம் இருக்காது என நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.