நள்ளிரவில் கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்!
ஆப்பிரிக்க நாட்டில், கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
புர்கினா பாசோவில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இவர்களின் கொட்டத்தை ஒடுக்க முடியாமல் அந்நாட்டு இராணுவம் திணறி வருகிறது.
இந்த நிலையில் புர்கினா பாசோவின் கிழக்கு பகுதியில் கோம்பிங்கா மாகாணத்தின் மட்ஜோரி நகரில் உள்ள ஒரு கிராமத்துக்குள் நள்ளிரவில் புகுந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த வீடுகள் அனைத்தையும் சூறையாடினர்.
பின்னர் கண்ணில்பட்டவர்களை எல்லாம் துப்பாக்கியால் சுட்டும், கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் வெட்டியும் கொடூர தாக்குதல் நடத்தினர்.
பயங்கரவாதிகளின் இந்த கொலைவெறி தாக்குதலில் பெண்கள், சிறுவர்கள் உட்பட சுமார் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.