கம்போடியா- தாய்லாந்து மோதல்; இராணுவச் சட்டம் அறிவிப்பு
கம்போடியா - தாய்லாந்து நாடுகளுக்கு இடையே உள்ள எல்லையில் பெரும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் தாய்லாந்து இராணுவ சட்டத்தை அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கம்போடியா - தாய்லாந்து நாடுகளுக்கு இடையே உள்ள எல்லையில் பெரும் மோதல் ஏற்பட்டது. அண்மையில், எல்லையில் கண்ணிவெடி வெடித்ததில் ஐந்து தாய்லாந்து வீரர்கள் காயமடைந்தனர்.
இதைத் தொடர்ந்து இரு நாடுகளும் தங்கள் தூதுவர்களை திரும்பப் பெற்றனர்.
இந்நிலையில், நேற்று எல்லையில் இரு நாடுகளும் பீரங்கி மற்றும் ரொக்கெட் குண்டுகளைப் பயன்படுத்தி தாக்கிக்கொண்டதையடுத்து தாய்லாந்து F16 விமானங்களை பயன்படுத்தி வான்வழித் தாக்குதல்களையும் நடத்தியது.
தாய்லாந்து சுகாதார அமைச்சு, ஒரு வீரர் மற்றும் குழந்தைகள் உட்பட 13 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 14 வீரர்கள் மற்றும் 32 பொதுமக்கள் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், கம்போடியா தரப்பில் குறைந்தது 4 பொதுமக்களும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கம்போடியாவுடன் நடந்து வரும் மோதல்களுக்கு மத்தியில் தாய்லாந்து தனது எல்லைப் பகுதிகளில் இராணுவச் சட்டத்தை அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.