உலக அகதிகள் தினத்தையொட்டி கனடா வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி
கனடா இந்த ஆண்டில் 45,000 அகதிகளை ஏற்றுக்கொள்ள இருப்பதாகவும், நிரந்தர வாழிட உரிமம் தொடர்பான விண்ணப்பங்களை விரைவாக பரிசீலிக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
வரும் ஞாயிற்றுக்கிழமை உலக அகதிகள் தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய கனடாவின் புலம்பெயர்தல் துறை அமைச்சரான Marco Mendicino, இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த ஆண்டு, நாட்டுக்குள் அனுமதிக்கப்படும் அகதிகளின் எண்ணிக்கை 23,500இலிருந்து 45,000ஆக உயர்த்தப்படும் என்று கூறியுள்ள அவர், நிரந்தர வாழிட உரிமம் தொடர்பான விண்ணப்பங்களை விரைவாக பரிசீலிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கனடாவில் வாழும் 40,000க்கும் அதிகமான அகதிகள் நிரந்தர வாழிட உரிமத்துக்காக காத்திருக்கும் நிலையில், இந்த ஆண்டு, இதுவரை 17,900 பேருக்கு நிரந்தர வாழிட உரிமம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.