புலம்பெயர்வோரை காவலில் அடைப்பதை கனடா உடனே நிறுத்தவேண்டும்... வலியுறுத்தும் சர்வதேச அமைப்புகள்
கனடா, புலம்பெயர்வோரை காவலில் அடைக்கும் முறைமையை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. ஒருவர் குற்றச் செயலில் ஈடுபட்டால், அவர் சிறையில் அடைக்கப்படுவார்.
ஆனால், அவர் எப்போது விடுவிக்கப்படுவார் என்பது அவருக்குத் தெரிவிக்கப்படும். அதே நேரத்தில், காவலில் அடைக்கப்படும் புலம்பெயர்வோரின் நிலைமை அதைவிட மோசம், அவர்கள் எப்போது விடுவிக்கப்படுவார்கள் என்பதே அவர்களுக்குத் தெரியாது.
ஆகவே, அது அவர்களை மனோரீதியாக கடுமையாக பாதிக்கிறது. அவர்கள் சில நேரங்களில் தற்கொலைக்கு கூட முயலும் அவலம் நேரிடுகிறது. இது மனித உரிமை மீறலையும் தாண்டிய ஒன்று என்று கூறியுள்ளன சர்வதேச தொண்டு நிறுவனம் மற்றும் மனித உரிமை அமைப்புகளான Amnesty International மற்றும் Human Rights Watch என்னும் அமைப்புகள்.
அவை, ’கனடாவில் புலம்பெயர்தல் காவல் மற்றும் மன நலன் மீதான அதன் தாக்கம்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், புலம்பெயர்வோர் கைகளிலும் கால்களிலும் விலங்கிடப்பட்டு, தனிமை சிறையில் அடைக்கப்படுவதோடு, கடினமான சூழல்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு தேடி வருவோரை காலவரையறையின்றி காவலில் அடைக்கும் கனடா, மறுபக்கம் அகன்ற கைகளுடன் அகதிகளையும் புதிதாக வருவோரையும் வரவேற்பதாக பெருமை கொள்கிறது என்கிறார், Human Rights Watch அமைப்பின் இயக்குநர்களில் ஒருவரான Samer Muscati.
கனடா, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான புலம்பெயர்வோரை காவலில் அடைக்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
ஆகவே, இப்படி புலம்பெயர்வோரை காவலில் அடைக்கும் முறைமையை உடனே கனடா முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அந்த மனித உரிமை அமைப்புகள், அதற்கு மாறாக மாற்று வழிகள் எதையாவது கனடா நடைமுறைப்படுத்தவேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளன.