உக்ரைன் போரில் மரணம் அடைந்த கனடிய முன்னாள் படைவீரர்: உருக்கமான பின்னணி
உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட படையெடுப்பை எதிர்த்து, உக்ரைனியப் படைகளுடன் இணைந்து களமிறங்கிய கனடிய முன்னாள் ராணுவ வீரர் டேண்டே ஜான்சன்-வெல்ஸ் போர்க்களத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
26 வயதான டெண்டே ஜான்சன் வெல்ஸ் மார்க்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனது 12-வது வயதிலேயே போர்ட் பெர்ரி ராணுவ கெடட் அமைப்பில் இணைந்த டேண்டே, செனெகா கல்லூரியில் தீயணைப்புப் படிப்பை முடித்த பின் கனடிய ஆயுதப்படையில் 7 ஆண்டுகள் பணியாற்றினார்.
நேட்டோ பயிற்சிகளின் போது உக்ரைனிய சூழலை நேரடியாக அறிந்த அவர், "அங்குள்ள மக்கள் தங்களின் உயிர்வாழ்விற்காகப் போராடுகிறார்கள்.

கனடாவில் இருந்து உதவுவதை விட நேரடியாகக் களத்தில் நின்று உதவுவதே சரி" என்று கருதி, 2025 டிசம்பர் மாதப் பணிக்கு பின் கனடிய ராணுவப் பணியிலிருந்து விலகினார்.
2026 பிப்ரவரியில் உக்ரைன் சென்று அந்நாட்டு ராணுவத்தின் வெளிநாட்டுப் படையில் கள மருத்துவ உதவியாளராகச் சேர்ந்தார்.
ஜூன் தொடக்கத்தில் முன்னணிப் போர்க்களத்தில் பணியில் இருந்தபோது டேண்டே துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கானார்.
துப்பாக்கிச் சூட்டிற்குப் பின், மருத்துவ உதவிக்காக அவரது சக வீரர்கள் அவரை 5 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் சுமந்து சென்றுள்ளனர். சிகிச்சை பலனின்றி 36 மணி நேரத்திற்குப் பிறகு ஜூன் 13 அன்று அவர் உயிரிழந்தார்.
ஜூன் 24 அன்று உக்ரைனில் உள்ள ஒரு சக வீரரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்த பிறகே அவரது தாயார் கேத்தரின் பாரூசிஸுக்கு இந்தத் தகவல் தெரியவந்தது.
கனடாவின் வெளியுறவுத் துறை , உக்ரைனில் கனடியப் பிரஜை ஒருவர் உயிரிழந்ததை உறுதிசெய்து, அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழலில் உக்ரைனுக்கான பயணங்களைத் தவிர்க்குமாறு கனடிய அரசு தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.