கனேடிய நாடாளுமன்ற தீர்மானம் ஐரோப்பிய நாடுகளிலும் எதிரொலிக்கும்! முக்கிய இராணுவ அதிகாரி அச்சம்
இலங்கையில் இடம்பெற்றது தமிழ் இனப்படுகொலை என்ற கனேடிய நாடாளுமன்றப் பிரகடனம், மேற்கு நாடுகளின் நாடாளுமன்றங்களிலும், ஐரோப்பிய ஒன்றியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என, முன்னாள் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே தெரிவித்துள்ளார்.
இறுதிக்கட்டப் போரில் முக்கிய பங்காற்றிய இராணுவ அதிகாரிகளில் ஒருவரான, மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே, போர்க்குற்றச்சாட்டுகள் காரணமாக, ஒஸ்ரேலியாவுக்கு பயணம் செய்ய முயன்ற போது அவரது விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
கனேடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தமிழர் இனப்படுகொலை நாள் தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே,
“இதுகுறித்து இலங்கைஅரசாங்கம் தாமதமின்றி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்த அவர் நூற்றுக்கணக்கான பூர்வீக குடிகளைச் சேர்ந்த, உறைவிடப் பள்ளி மாணவர்களின் மரணம், குறித்து, இலங்கை நாடாளுமன்றம் கனடாவுக்கு நினைவூட்ட வேண்டும் என்றார்.
அதோடு இலங்கைக்கு எதிராக அறிக்கைகளை வெளியிடுபவர்களும், அரசியல் கட்சிகளும், சிவில் சமூகக் குழுக்களும் கனடாவின் கொடூரமான கடந்த காலத்தை கேள்விக்குட்படுத்துவார்களா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், “நாட்டிற்கு எதிரான பிரச்சாரத்தை எதிர்கொள்வதில் இலங்கைக்கு அரசியல் விருப்பம் இல்லை என்றும், பல தசாப்தங்களாக தவறான பொருளாதார நிர்வாகத்தால் தற்போதைய அரசியல்- நிதி- சமூக நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான நிலையில், கனேடிய நாடாளுமன்றப் பிரகடனம் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், இலங்கை மீதான கனேடிய நாடாளுமன்றத்தின் தீர்மானத்தை ஆர்வமுள்ள தரப்பினர் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளக் கூடும் என்பதை அரசாங்கம் ஆராய்வதில அக்கறை காட்டுமா? எனவும் மேஜர் ஜெனரல் கல்லகே கேள்வி எழுப்பியுள்ளார்.