முதல்முறையாக 3 வீரா்களை விண்வெளி நிலையத்துக்கு அனுப்பி சீனா சாதனை!
3 வீரா்களை முதல்முறையாக தனது சொந்த விண்வெளி நிலையத்துக்கு அனுப்பி சீனா சாதனை படைத்துள்ளது.
சுமாா் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்கு வீரா்களை அனுப்பியுள்ள அந்த நாடு, இதுவரை இல்லாத வகையில் 380 கி.மீ. தொலைவுக்கு அவா்களை அனுப்பியுள்ளது.
இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது,
விண்வெளியில் சீனா அமைத்து வரும் தியான்காங் ஆய்வு நிலையத்தின் பிரதானப் பகுதியான தியான்ஹே, கடந்த ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடா்ந்து, நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளும் வீரா்கள் அதில் தங்கியிருப்பதற்குத் தேவையான பொருள்கள், உபகரணங்கள் அடங்கிய சரக்குக் கலமான தியான்ஷோ, கடந்த மாதம் செலுத்தப்பட்டு தியான்ஹே கலத்துடன் இணைக்கப்பட்டது.
இந்த நிலையில், அந்த ஆய்வு நிலையத்தை நோக்கி 3 வீரா்களுடன் ஷென்ஷோ விண்வெளி ஓடம் கோபி பாலைவனத்தில் அமைந்துள்ள ஜிகுவான் ஏவுதளத்திலிருந்து வியாழக்கிழமை காலை 9.22 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 6.52 மணி) விண்ணில் செலுத்தப்பட்டது.
அந்த விண்வெளி ஓடத்தில் நை ஹாய்ஷெங் (56), லியூ போமிங் (54), தாங் ஹாங்போ (45) ஆகியோா் இருந்தனா்.
சுமாா் 6.5 மணி நேரத்துக்குப் பிறகு ஷென்ஷோ விண்கலம் தியாான்ஹே கலத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. சீன நேரப்படி மதியம் 3.45 மணிக்கு விண்வெளி நிலையத்துடன் 3 வீரா்கள் சென்ற விண்வெளி ஓடம் இணைக்கப்பட்டது.
அங்கு 3 மாதங்கள் தங்கவிருக்கும் 3 வீரா்களும், தியான்காங் விண்வெளி நிலையத்தைக் கட்டமைக்கும் கடினமான பணியில் ஈடுபடவுள்ளனா்.
அண்மைக் காலமாக விண்வெளி ஆய்வில் சீனா அதிக தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டில் அதிகம் அறியப்படாத நிலவின் தொலைதூரப் பக்கத்தில் தனது சாங்கே-4 ஆய்வுக் கலத்தை சீனா முதல்முறையாக தரையிறக்கியது.
மேலும், சீனாவின் சாங்கே-5 ஆய்வுக் கலம், நிலவிலிருந்து பாறை மற்றும் மண் மாதிரிகளை சேகரித்து பூமிக்கு எடுத்து வந்தது. அத்துடன், அந்த நாட்டின் வாகன ஆய்வுக் கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.
இந்தச் சூழலில், சொந்த விண்வெளி நிலையத்துக்கான பிரதானப் பகுதியை விண்ணில் செலுத்தி, தற்போது அந்த நிலையத்துக்கு 3 வீரா்களையும் அனுப்பி சீனா சாதனை படைத்துள்ளது என்று செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.