தாய்வானுக்கு மிரட்டல் விடுத்த சீனா!
அவசியம் ஏற்பட்டால் தாய்வானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் எனவும் சீனா மிரட்டி வருகிறது.
கடந்த ஆண்டு முதல் தனது இறையாண்மையைப் பாதுகாப்பதாகக் கூறி சீனா, தாய்வானை நோக்கி அடிக்கடி போர் விமானங்களை அனுப்பி வருகிறது.
இந்தநிலையில் இதுவரை இல்லாத வகையில் 28 போர் விமானங்களை சீனா தங்கள் நாட்டை நோக்கி அனுப்பியதாக தாய்வான் ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அணு சக்தி திறன் கொண்ட குண்டுவீச்சு விமானங்கள் உள்பட 28 போர்விமானங்கள் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள வான் பாதுகாப்பு மண்டலத்துக்குள் நுழைந்ததாகவும், இதனை எதிர்கொள்ள தங்கள் வான்வழி ரோந்து படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற ஜி-7 மற்றும் நேட்டோ மாநாடுகளின் போது சீனாவின் ராணுவ நடவடிக்கைகள் குறித்து கடுமையாக எச்சரிக்கப்பட்டதோடு, மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை சீனா மதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.