இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா உயிரிழப்பு!
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 6,148 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. மூன்றாவது நாளாக இன்று கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கு கீழ் பதிவாகியுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 94 ஆயிரத்து 52 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 91 லட்சத்து 83 ஆயிரத்து 121 ஆக அதிகரித்துள்ளது. \
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 11 லட்சத்து 67 ஆயிரத்து 952 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 367 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 76 லட்சத்து 55 ஆயிரத்து 493 ஆக அதிகரித்துள்ளது.
எனினும், கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 197 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பீகார் மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் குறித்து மறுகணக்கீடு செய்யப்பட்டது. அந்த மறுகணக்கீட்டில் 3 ஆயிரத்து 951 பேர் உயிரிழந்தது அதிகாரப்பூர்வமாக தகவலில் பதிவு சேர்க்கப்படாமல் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அதிகாரப்பூர்வ தகவலில் சேர்க்கப்படாமல் இருந்த 3 ஆயிரத்து 951 உயிரிழப்பு எண்ணிக்கை மறுகணக்கீட்டின் மூலம் நேற்று பீகார் சுகாதாரத்துறை அமைச்சகம் சேர்த்துள்ளது. இந்த தகவல் குறித்து இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த உயிரிழப்புகளும் நேற்றைய உயிரிழப்பு எண்ணிக்கையுடன் சேர்க்கப்பட்டது.
இதனையடுத்து நேற்றைய உயிரிழப்பு எண்ணிக்கையான 2,197 உடன் பீகார் அளித்த உயிரிழப்பு எண்ணிக்கையான 3,951 உயிரிழப்புகள் சேர்க்கப்பட்டு கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் புதிய உச்சமாக 6 ஆயிரத்து 148 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.