பிரான்ஸில் மருத்துவர் ஒருவருக்கு எபோலா வைரஸ்
கொங்கோ ஜனநாயகக் குடியரசிலிருந்து (DRC) பிரான்ஸ் திரும்பிய மருத்துவர் ஒருவருக்கு எபோலா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மனிதாபிமானப் பணியை முடித்துவிட்டுத் பிரான்ஸ் திரும்பிய மருத்துவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இவருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் நடவடிக்கைகளை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

ஐரோப்பிய மக்களுக்கு இதனால் பெரிய ஆபத்து இல்லை
எனினும் ஐரோப்பிய மக்களுக்கு இதனால் பெரிய ஆபத்து இல்லை என்று அமைச்சு உறுதியளித்துள்ளது. கொங்கோவில் தற்போது பரவி வரும் எபோலா பாதிப்பானது, முந்தைய எந்தவொரு எபோலா தொற்றையும் விட மிக வேகமாகப் பரவுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) எச்சரித்துள்ளது.
அங்கு இதுவரை 1,094 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 277 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பாதிப்பு 'Bundibugyo' என்ற அரிதான வகை வைரஸால் ஏற்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் தொற்று கண்டறியப்பட்டமையால், இதன் தாக்கம் மிக அதிகமாக இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் அப்திரஹ்மான் மஹமூத் தெரிவித்துள்ளார்.
"இந்த வைரஸின் பரவல் எங்களின் கட்டுப்பாட்டை விட வேகமாக உள்ளது.எனவே இதைக் கட்டுப்படுத்த அவசர நடவடிக்கைகளை விரிவுபடுத்த வேண்டியது அவசியம்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் மேற்கு ஆபிரிக்கா மற்றும் கொங்கோவில் ஏற்பட்ட எபோலா பாதிப்புகள் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கிய நிலையில், தற்போதைய சூழல் உலகளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.