பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்யுமாறு டொனால்ட் ட்ரம்ப் அறிவுறுத்தல்
மத்திய கிழக்கின் மோதல்களைத் தீர்ப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஸ்டீவ் விட்கோஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோருக்கு அறிவுறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்காக அவர்கள் இன்று (25) பாகிஸ்தானுக்குப் பயணிக்கத் திட்டமிட்டுள்ளதாக முன்னதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன.
எவ்வாறாயினும், குறித்த பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என அமெரிக்க ஜனாதிபதி தனது பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை எனும் நிலையில், அதற்காக 18 மணித்தியால விமானப் பயணம் தேவையற்றது என அவர்களிடம் தான் கூறியதாக டொனால்ட் ட்ரம்ப் Fox News தொலைக்காட்சிக்குத் தெரிவித்துள்ளார்.
ஈரானிய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் நேற்று (24) பாகிஸ்தானுக்கு விஜயம் செய்திருந்ததோடு, இதன்போது அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தமது தரப்பு தயாராக இல்லை என அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கமைய, ஈரான் தூதுக்குழுவினர் இன்று (25) பாகிஸ்தான் பிரதமர் உள்ளிட்ட உயர்மட்ட இராஜதந்திரிகளுடன் சந்திப்பை நடத்திவிட்டு அந்நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.