களைகட்டிய பிறந்தநாள் கொண்டாட்டம்... 6 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்
ஒன்ராறியோவில் குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி 6 வயது சிறுமி மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்ராறியோவின் ஓஷாவா நகரில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போதே இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
சனிக்கிழமை இரவு சுமார் 7 மணியளவில் குடியிருப்பு ஒன்றில் பெரிய கூட்டம் ஒன்று காணப்படுவதாக டர்ஹாம் பிராந்திய காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலை அடுத்து சம்பவப்பகுதிக்கு சென்ற பொலிசாரிடம், 6 வயது பெண் பிள்ளை ஒன்று மாயமானதாக கூறி, உதவக் கேட்டுள்ளனர்.
பொலிசார் அந்த குடியிருப்பு வளாகம் மற்றும் அருகாமையில் உள்ள பகுதி முழுமையும் தீவிரமாக தேடியுள்ளனர். இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் அந்த குடியிருப்பு வளாகத்தின் நீச்சல் குளத்தில் தேடிய பொலிசாருக்கு, குழந்தையின் உடல் சிக்கியுள்ளது.
இதனையடுத்து, முதலுதவிக்கு பின்னர் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு சிறுமியுடன் விரைந்துள்ளனர். ஆனால் சில மணி நேரத்தில் சிறுமி இறந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் விசாரணை முன்னெடுத்துள்ளனர். இதனிடையே, பொலிசார் சம்பவப்பகுதிக்கு வந்து சேரும் முன்னர், பெண் ஒருவர் தமது பிள்ளையை காணவில்லை என கூறி, அப்பகுதியில் உதவி கேட்டு சென்றுள்ளார்.
சம்பவம் நடந்த குடியிருப்பின் உரிமையாளர் தமது மகளின் 5வது பிறந்தநாளை கொண்டாடி வந்துள்ளார். மகிழ்ச்சியுடன் கொண்டாடி வந்த பிறந்தநாள் நிகழ்வு இறுதியில் துயர சம்பவமாக மாறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சிறுமி நீச்சல் குளத்தில் சிக்கியுள்ளதை யாரும் கவனிக்கவில்லை என்பதுடன், சிறுமி அக்கம் பக்கத்தில் காணாமல் போயிருக்கலாம் என்றே கருதியுள்ளனர்.
இதனால் தண்ணீரில் மூழ்கிய சிறுமியை உரிய நேரத்தில் காப்பாற்ற முடியாமல் போயுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளனர்.