ரஷ்யாவில் பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான மருந்து கண்டுபிடிப்பு
பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிராகக் கண்டுபிடிக்கப்பட்ட மருந்து, பயன்படுத்தத் தயாராக உள்ளதென ரஷ்யா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நோயாக புற்றுநோய் மாறி உள்ளது. இதன் காரணமாக ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
இதனைக் கட்டுப்படுத்துவதற்கென உலகளவில் ஆராய்ச்சி நடந்த வண்ணம் உள்ளது. தனியார் நிறுவனங்களும் ஆய்வு செய்து வந்தன.
சமீபத்தில், ரஷ்ய விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக, அந்நாட்டு ஜனாதிபதி புடின் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி, பயன்பாட்டுக்குத் தயார் நிலையில் உள்ளதாக ரஷ்யாவின் மத்திய மருந்து மற்றும் உயிரியல் நிறுவன (Biological Agency) அமைப்பு தெரிவித்துள்ளது.
பல ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சியின் முடிவில், கடந்த 3 ஆண்டு மருத்துவப் பரிசோதனையில் இருந்த இந்தப் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி, பயன்பாட்டுக்குத் தயார் நிலையில் உள்ளது என்றும், விரைவில் அந்த நாட்டு அரசாங்கத்தின் ஒப்புதலுக்குப் பிறகு பயன்பாட்டுக்கு வரும் எனவும் மத்திய மருந்து மற்றும் உயிரியல் நிறுவன (Biological Agency) அமைப்பின் தலைவர் வெர்னிகோ கோவோர்ட்சோவா (Veronika Skvortsova) தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தத் தடுப்பூசி, பாதுகாப்பானது என்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாகவும், புற்றுநோய்க்கு எதிராகக் குறித்த தடுப்பூசி செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நோயின் முக்கியத்துவத்தைப் பொறுத்து, புற்றுநோய்க் கட்டி விரைவில் அளவு குறைவதுடன், குணமடையும் வேகமும் 60 முதல் 80 சதவீதம் அதிகரிப்பதாகவும், பல புற்றுநோய்களுக்குத் தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.