கனடாவில் பர்தா அணிந்த பெண்ணை கழுத்தைப் பிடித்து கீழே தள்ளிய மர்ம நபர்... தொடரும் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்
கனடாவில் இஸ்லாமிய குடும்பம் ஒன்றின் மூன்று தலைமுறையினர் கொல்லப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு இஸ்லாமிய பெண் தாக்கப்பட்டுள்ளார்.
கனடாவின் எட்மண்டனில் சோமாலி கனேடியரான ஒரு இஸ்லாமிய பெண் மீது மர்ம நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியதாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு காற்று வாங்கச் சென்ற அந்த பெண் நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, மர்ம நபர் ஒருவர் அந்தப் பெண்ணின் கழுத்தைப் பிடித்து பலமாக கீழே தள்ளி இருக்கிறார்.
சோமாலி கனேடிய கலாச்சார சமூகத்தின் தலைவரான Jibril Ibrahim இது குறித்துக் கூறும்போது, தனது 50 வயதுகளிலிருக்கும் அந்த பெண் இரவில் சற்று காலார நடந்து வரலாம் என வெளியே சென்றிருந்தபோது, மர்ம நபர் ஒருவரால் தாக்கப்பட்டதாகவும், அவர் பலமாக கீழே தள்ளப்பட்டதில் அவரது முகம் முழுவதும் இரத்தமாகி, பற்கள் ஆட்டம் கண்டுள்ளதாகவும், இரவு முழுவதும் அவர் மருத்துவமனையில் செல்விடவேண்டியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
எட்மண்டன் பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். எட்மண்டனில், கருப்பின இஸ்லாமியப் பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது சமீப நாட்களில் இது ஆறாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.