அமெரிக்கா ஒரு எதிரியைப் போலச் செயல்படுகிறது - கனடிய பிரதமர்
அமெரிக்கா ஒரு நட்பு நாடாக இல்லாமல், கனடாவிற்கு எதிரான ஒரு பொருளாதார எதிரியைப் போலச் செயல்படுவதாக கனடிய பிரதமர் மார்க் கார்னி மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்காவின் தற்போதைய பொருளாதாரப் போக்குகளை அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

இதுவரை அமெரிக்காவுடன் நமக்கு இருந்த நெருக்கமான பிணைப்பு நமது பலமாகக் கருதப்பட்டது. ஆனால் இன்று அதே பிணைப்பு நமது பலவீனமாக மாறியுள்ளது. இந்தத் தவறை நாம் உடனடியாகத் திருத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பாரிய பொருளாதார வீழ்ச்சி காலத்திற்குப் பின்னர் என்றுமில்லாத த அளவிற்கு அமெரிக்கா தற்போது இறக்குமதி வரிகளை (Tariffs) உயர்த்தியுள்ளது. அமெரிக்கா தனது வர்த்தக அணுகுமுறையை அடிப்படை ரீதியாகவே மாற்றிக்கொண்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கைகளால் கனடாவின் எஃகு, மரம் மற்றும் வாகனத் தொழில்துறையைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயத்தில் உள்ளதாகவும், நாடு முழுவதும் ஒரு நிச்சயமற்ற சூழல் நிலவுவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
தனது உரையின் போது 1812-ம் ஆண்டு போரில் அமெரிக்க ஆக்கிரமிப்பைத் தடுத்துப் போரிட்ட வீரன் சர் ஐசக் ப்ரோக் (Sir Isaac Brock) சிலையைக் காண்பித்த பிரதமர், "கனடா என்ற நாடு உருவாவதற்கு முன்பே அமெரிக்க ஊடுருவலுக்கு எதிராக நாம் ஓரணியில் திரண்டோம். அதே போன்றதொரு ஒற்றுமை இப்போதும் நமக்குத் தேவை," என உணர்ச்சிகரமாக கார்னி குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் நோக்கில் வலுவான கனடா என்ற திட்டத்தை அவர் முன்னிறுத்தியுள்ளார்.