கனடிய பிரஜைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கை
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக, இந்த கோடைக்கால சுற்றுலாப் பயணங்களின் போது உலகளவில் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என கனடிய மத்திய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோடைக்காலம் நெருங்கி வருவதால், பல கனடியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லத் திட்டமிட்டு வருகின்றனர்.
ஆனால் மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழல், உலகெங்கிலும் உள்ள பயணிகளுக்குச் சவால்களை ஏற்படுத்தக்கூடும் என கனடிய அரசாஙக்ம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் கனடிய வெளிவிவகார அமைச்சு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்படலாம் அல்லது செல்லும் இடங்களில் உள்ளூர் சேவைகள் மற்றும் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்பவர்கள் அல்லது அந்தப் பிராந்தியத்தின் வழியாக மற்ற இடங்களுக்குப் பயணம் செய்பவர்களின் திட்டங்கள் எந்த நேரத்திலும் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் மற்றும் விநியோகச் சங்கிலியில் (Supply chain) ஏற்பட்டுள்ள உலகளாவிய நெருக்கடி காரணமாக, மத்திய கிழக்கிற்கு வெளியே உள்ள நாடுகளுக்குச் செல்பவர்களுக்கும் விமான ரத்து அல்லது தாமதம் போன்ற சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுப் பயணம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். வெளிநாட்டில் சிக்கிக்கொள்ளும் கனடியர்களுக்கு அரசாங்கம் வழங்கக்கூடிய தூதரக உதவி (Consular assistance) மிகவும் குறைவாகவே இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் சிக்கிக் கொள்ளும் சூழலில், அங்கேயே தங்குவதற்கும் மருந்துகளை வாங்குவதற்கும் தேவையான கூடுதல் நிதியை வைத்திருக்க வேண்டும் எனவும் கனடா அரசாங்கம் எவ்வித நிதியுதவியையும் வழங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணங்கள் ரத்து செய்யப்படுதல் அல்லது பாதியில் நிறுத்தப்படுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான பயணக் காப்பீட்டைப் பெறுமாறு அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது.