பூங்காவில் சடலமாக மீட்கப்பட்ட ஆசிய இளைஞர்
மிசிசாகாவில் 27 வயது இளைஞரின் மரணம் தொடர்பாக மேலதிக தகவல்களுக்கு பீல் பிராந்திய பொலிசார் பொதுமக்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது தொடர்பில் பீல் பிராந்திய பொலிசார் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பில், சனிக்கிழமை பகல் தங்களுக்கு ஒரு தகவல் கிடைத்ததாகவும், அதில் டெர்ரி கிரீன்வே பூங்காவில் இளைஞர் ஒருவர் பேச்சு மூச்சின்றி தரையில் கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், எந்த உயிர் அறிகுறிகளும் இல்லாத நிலையில் ஒரு இளைஞரை மீட்டுள்ளனர்.
தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மருத்துவ சோதனையில் அவர் இறந்துள்ளதை பொலிசார் உறுதி செய்தனர். இந்த நிலையில், அந்த இளைஞரின் பெயர் Simranjeet Singh Sidhu எனவும், 27 வயதான அந்த இளைஞருக்கு நிரந்தரமான முகவரியும் இல்லை என்பதையும் பொலிசார் உறுதி செய்துள்ளனர்.
தற்போது இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், குறித்த இளைஞர் தொடர்பில் அறிமுகமானவர்கள் பொலிசாருக்கு தகவல் அளித்து உதவ வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்துள்ளனர்.