கனடாவில் பாரிய விபத்து: 4 இளைஞர்கள் பரிதாப பலி!
கனடாவின் மேனிடோபா மாகாணத்தில் உள்ள வின்னிபெக் பீச் பகுதியில் இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட கொடூர விபத்தில் 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கிம்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நெடுஞ்சாலை 229-ல் மேற்காகப் பயணித்த கார் ஒன்று, நெடுஞ்சாலை 8-ஐக் கடக்க முயன்றபோது, தெற்கு நோக்கி வந்த வேன் ஒன்றுடன் பலமாக மோதியது.
இந்தச் சந்திப்பில் கிழக்கு மற்றும் மேற்கு நோக்கிச் செல்லும் வாகனங்களுக்கு 'நிற்குமாறு' எச்சரிக்கைப் பலகைகள் அமைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் வீதியின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டன.
அதில் ஒரு வாகனம் தலைகீழாகக் கவிழ்ந்தது. மேற்கு நோக்கிச் சென்ற காரில் பயணித்த 4 பேருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காரை ஓட்டிவந்த வின்னிபெக்கைச் சேர்ந்த 18 வயது பெண், கிம்லியைச் சேர்ந்த 18 வயது இளைஞர், சேண்டி ஹூக்கைச் சேர்ந்த 18 வயது பெண் மற்றும் ஒன்டாரியோவின் இயர் ஃபால்ஸைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.
வேனில் பயணித்த வின்னிபெக்கைச் சேர்ந்த 49 வயது ஓட்டுநர், ஒரு பெண் மற்றும் இரு குழந்தைகள் என 4 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் அனைவரும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் வின்னிபெக் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பொலிஸார், விபத்துக்கான முழுமையான காரணம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.