பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தின் தொற்று நிலவரம் வெளியானது
பிரான்சில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 47.000 பேர்களுக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக நாடுகள் பல கொரோனா பெருந்தொற்றின் புதிய ஆபத்து மிகுந்த மாறுபாடான ஓமிக்ரான் தொடர்பில் பீதியடைந்துள்ளன. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதுடன், ஓமிக்ரான் தொற்றானது அடையாளம் காணப்பட்ட தெற்கு ஆபிரிக்க நாடுகளில் இருந்து நேரடி விமான சேவைகளை தடை செய்துள்ளது.
மேலதிகமாக, இஸ்ரேல், ஜப்பான் ஆகிய நாடுகள் சர்வதேச எல்லைகளை மூடிவைத்துள்ளதுடன், அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரையில் வெளிநாட்டுப் பயணங்களை தவிர்க்க நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 47,177 என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 10.000 கடந்துள்ளது.
தற்போது 10,249 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 389 பேர் கடந்த 24 மணிநேரத்தில் அனுமதிகப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் 1,824 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 75 பேர் இந்த 24 மணிநேரத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, இரண்டாவது நாளாக தினசரி இறப்பு எண்ணிக்கை 100 எண்ணிக்கையை கடந்துள்ளது.
பிரான்சில் இதுவரை 119,131 பேர் கொரோனா பெருந்தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர். இவர்களில் 114 பேர் கடந்த 24 மணிநேரத்தில் மரணமடைந்துள்ளனர்.