பள்ளி காலம் முதல் ஆரம்பித்த யுவதிகளின் நட்பு; திருமணத்தில் முடிந்ததால் பெற்றோர் அதிர்ச்சி
இந்தியாவின் ஹரியானா மாநிலம் குர்கிராம்மிற்குட்பட்ட பட்டாவுடி என்ற பகுதியை சேர்ந்த 20 வயது பெண் ஒவர் ஜாஜ்ஜர் என்ற பகுதியைச் சேர்ந்த 19 வயது பெண்ணை திருமணம் செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த இருவரும் பள்ளி காலம் முதலே நட்பாக இருந்த நிலையில் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளது. இது குறித்து அவர்கள் அவர்களது வீட்டில் சொல்லியுள்ளனர். எனினும் இரு வீட்டாரும் இது சமூதாயம் ஒத்துக்கொள்ளாத விஷயம் என்பதால் இவர்கள் ஒருவரை ஒருவர் மறக்கும்படி அறிவுரை கூறியுள்ளனர். இந்நிலையில் பட்டாவுடியை சேர்ந்த 20 வயது பெண் கடந்த சில 10 நாட்களுக்கு முன் காணாமல் போய் உள்ளார்.
இதனால் பதற்றமடைந்த அந்த பெண்ணின் தந்தை பொலிஸாரிடம் தன் மகளை காணவில்லை என புகார் அளித்தார். இதனையடுத்து பொலிசார் அந்த பெண்ணை தீவிரமாக தேடி கடந்த சனிக்கிழமை பிடித்தனர். அப்பொழுது தான் அவர்கள் தான் தனது காதலியை திருமணம் செய்து கொண்டதை கூறியுள்ளார்.
இவர்கள் இருவரும் சோக்னா என்ற பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்துள்ளதுடன் இருவரும் தற்போது ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இதையடுத்து போலீசார் இந்த இரண்டு பெண்களையும் கோர்ட்டில் ஒப்படைத்த நிலையில், கோர்ட் இரு பெண்களும் 18 வயதை கடந்தவர்கள் என்பதால் அவர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்வதும் வாழாததும் அவர்கள் உரிமை என்றும், கூறியுள்ளது.
எனினும் அவர்களின் பெற்றோர்கள் எவ்வளவோ எடுத்து கூறியும், அவர்கள் வர மறுத்ததால் தற்போது இருவரும் ஒன்றாகவே வாழ்ந்து வருகின்றதாக கூறப்படுகின்றது.