ஜெர்மனியில் குப்பைத்தொட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட 350 ஆண்டு பழமையான ஓவியம்!
ஜெர்மனியில் சுமார் 350 ஆண்டுகள் பழமையான ஓவியம் குப்பைத் தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்டது. தென்கிழக்குப் பகுதியில் உள்ள கலோன் என்ற நகரத்தில் 64 வயதான முதியவர் ஒருவர் சாலையில் சென்ற போது அங்கிருந்த குப்பைத் தொட்டியில் அழகிய ஓவியம் கிடப்பதைக் கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் ஓவியத்தைக் கைப்பற்றிப் பார்த்தபோது 17ம் நூற்றாண்டில் வரையப்பட்டது தெரியவந்தது. 1665ம் ஆண்டு வாழ்ந்த ஓவியர் பியட்ரோ பெல்லோட்டி என்பவர் தன்னைத் தானே வரைந்த ஓவியம் அது.
ஓவியத்தின் பின்புறம் அந்த ஓவியரின் பெயர் மற்றும் ஆண்டு குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது அந்த ஓவியத்தை குப்பைத் தொட்டியில் வீசியவர் யார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.