கனடாவில் ஹண்டா வைரஸ் அச்சுறுத்தல்: குறித்து வெளியான அறிவிப்பு
கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் ஹண்டா வைரஸ் பரவல் குறித்த கவலை எழுந்துள்ள நிலையில், முறையான பொது சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இதனை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் என தொற்றுநோய் நிபுணர் டாக்டர் ஐசக் போகோச் தெரிவித்துள்ளார்.
தொடர்பு தடமறிதல், தனிமைப்படுத்துதல் மற்றும் நோயுற்றவர்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளித்தல் போன்ற பொது சுகாதார விதிமுறைகளை அனைவரும் சரியாகப் பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கனடா தற்போது இந்த நடவடிக்கைகளை மிகச் சரியாகச் செய்து வருகிறது. ஒவ்வொரு நாடும் இந்த கடமையைச் சரியாகச் செய்தால், இந்த பாதிப்பு விரைவில் முடிவுக்கு வரும் என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு அர்ஜென்டினாவில் இதே போன்ற 'ஆண்டிஸ்' வைரஸ் பரவல் ஏற்பட்டபோது, இத்தகைய பொது சுகாதார நடவடிக்கைகள் மூலமே அது வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது ஒண்டாரியோவில் மூன்று பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதில் இருவர் கிரே-புரூஸ் பகுதியையும், ஒருவர் பீல் பிராந்தியத்தையும் சேர்ந்தவர்கள். இவர்கள் யாருக்கும் தற்போது வரை நோய்க்கான அறிகுறிகள் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது. ஒரு சுற்றுலா கப்பலில் ஏற்பட்ட பாதிப்பால் இந்த அச்சுறுத்தல் தொடங்கியுள்ளது.
அங்கு 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 3 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது பரவி வரும் 'ஆண்டிஸ்' வகை ஹண்டா வைரஸ், அரிதான சூழல்களில் மனிதர்களிடையே பரவக்கூடியது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
கனடாவில் இதுவரை யாருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவப் பணியாளர்கள் நோயாளிகளைக் கையாளும் போது கூடுதல் பாதுகாப்பு கவசங்களைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.