காதலின் பெயரால் மோசடி: தென் கொரிய சிறையில் வாடும் கனடா பெண்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் சர்ரே (Surrey) பகுதியைச் சேர்ந்த 59 வயதான ஸ்பிரிங் பார்க்ஸ் (Spring Parks), கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக தென் கொரிய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இணையதளம் வழியாக அறிமுகமான நபர் ஒருவரை காதலித்த இவரை, அந்த நபர் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
ஸ்பிரிங் பார்க்ஸ் காதுகேளாதவர் (Deaf) மற்றும் பேசும் திறன் அற்றவர். இணையதளம் மூலம் பழகிய நபர் ஒருவர் மீது கொண்ட காதலால், அவரைச் சந்திக்க வான்கூவரில் இருந்து தென் கொரியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

பயணத்தின் இடையே, அந்த நபர் சொன்ன அறிவுறுத்தலின்படி தென் ஆப்பிரிக்காவில் ஒரு சூட்கேஸை வாங்கிக் கொண்டு கொரியா சென்றார்.
அங்கு விமான நிலையத்தில் சோதனையிட்ட அதிகாரிகள், அவரது சூட்கேஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 4 கிலோ மெத்தாம்பேட்டமைன் (Methamphetamine) போதைப்பொருளைக் கண்டெடுத்து அவரைக் கைது செய்தனர்.
அவர் அந்த சூட்கேஸில் போதைப்பொருள் இருப்பதை அறிந்திருக்கவில்லை. அவர் ஒரு பலிகடா மட்டுமே. காதல் என்ற பெயரில் அவர் மூளைச்சலவை செய்யப்பட்டு, மிகத் தந்திரமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளார்" என ஸ்பிரிங் பார்க்ஸின் வழக்கறிஞரான சீன் ஹேய்ஸ் (Sean Hayes) தெரிவித்துள்ளார்.
எனினும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் அளவு அதிகமாக இருப்பதால், இது ஒரு திட்டமிட்ட கடத்தல் என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சந்தேகிக்கின்றனர்.
பார்க்ஸ் காதுகேளாதவர் என்பதால், சிறை அதிகாரிகளுடன் தொடர்புகொள்வதில் பெரும் சிரமம் நீடிக்கிறது. கொரிய சிறைகளில் நிலவும் கடும் குளிரும், அடிப்படை உணவுகளும் அவருக்குப் பெரும் சவாலாக உள்ளன.
தான் நேசித்த நபர் தன்னை ஏமாற்றி சிறைக்கு அனுப்பியதை உணர்ந்த அவர், மிகுந்த மனவேதனையில் இருப்பதாகத் தெரிகிறது. மெட்ரோ வான்கூவரில் வசிக்கும் பார்க்ஸின் மகள்கள் ஆண்ட்ரியா மற்றும் லோரீன், பிப்ரவரி மாதம் வந்த அந்த ஒரு அதிர்ச்சித் தகவலுக்குப் பிறகு இன்றுவரை தாயிடம் பேசக்கூட முடியவில்லை என்று கதறுகின்றனர்.
இந்த வழக்கை உற்றுநோக்கும் சட்ட வல்லுநர்கள், தற்போது 'ரொமான்ஸ் ஸ்கேம்' (Romance Scam) எனப்படும் காதல் மோசடிகள் அதிகரித்து வருவதாக எச்சரிக்கின்றனர்.
முதியவர்கள் மட்டுமின்றி, இளைஞர்களும் இதுபோன்ற தந்திரமான வலைகளில் சிக்கித் தங்கள் வாழ்வைத் தொலைப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ள நிலையில், பார்க்ஸின் வழக்கறிஞர்கள் அவர் அறியாமல் செய்த தவறுக்காகக் குறைந்தபட்சத் தண்டனையை பெற்றுத் தரப் போராடி வருகின்றனர்.