பிறருக்கு உதவச் சென்றவருக்கு நேர்ந்த பெருஞ்சோகம்
பிறர் துயர் கண்டு ஓடிவந்து உதவி செய்த ஒரு நல்ல உள்ளம், எதிர்பாராத விபத்தில் தன் உயிரை இழந்திருக்கும் சம்பவம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 2-ம் திகதி இரவு, ஸ்மிதர்ஸ் அருகே உள்ள நெடுஞ்சாலையில் ஒரு சாம்பல் நிற டிரக் இயந்திரக் கோளாறு காரணமாகச் சாலையோரம் நின்றிருந்தது.
அதைக் கண்ட அந்த வழியாக வந்த இரண்டு வாகனங்களில் இருந்தவர்கள், மனிதாபிமான அடிப்படையில் அந்த டிரக் ஓட்டுநருக்கு உதவ முன்வந்தனர்.

60 வயது மதிக்கத்தக்க விட்செட் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவரும், கால்கரி பகுதியைச் சேர்ந்த 45 வயது நபர் ஒருவரும் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு, பழுதான டிரக்கைச் சீரமைக்க உதவிக் கொண்டிருந்தனர்.
இருவருமே தங்களின் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல் சாலையில் இறங்கி உதவி செய்துகொண்டிருந்த அந்தத் தருணத்தில், மின்னல் வேகத்தில் வந்த ஒரு கருப்பு நிற செவ்ரோலெட் டாஹோ கார், அங்கிருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதியது.
இந்தக் கோர விபத்தில், உதவி செய்ய வந்த 60 வயது முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் இணைந்து உதவ முயன்ற மற்றொரு நபர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்குப்போராடி வருகிறார்.
இத்தனைக்கும் காரணமான அந்தக் காரைச் செலுத்திய 42 வயது நபரும் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறை அதிகாரி மைக்கேல் மெக்லாலின் கூறுகையில், இந்தக் கொடூர விபத்திற்கு மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதே முக்கியக் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
ஒருவர் ஆபத்தில் இருக்கிறார் என்று தெரிந்ததும் ஓடிச் சென்ற அந்த மனிதரின் உயிர், ஒருவரின் பொறுப்பற்ற குடிப் பழக்கத்தால் பறிபோயுள்ளது.
உதவி செய்ய நினைத்த கைகள் உயிரற்றுக் கிடக்கும் இந்தக் காட்சி, அந்தப் பகுதி மக்களிடையே ஆற்ற முடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.