ஒண்டாரியோவில் புதிய வகை கோவிட் தொற்று
தென்னாப்பிரிக்காவில் கடந்த 2024 நவம்பரில் முதன்முதலில் கண்டறியப்பட்ட 'BA.3.2' என்ற புதிய வகை உருமாறிய கோவிட் வைரஸ், தற்போது கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்திலும் பரவியுள்ளது.
அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் (CDC) ஆய்வின்படி, இந்த வைரஸ் ஏற்கனவே இந்தியா உட்பட 23 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
ஒண்டாரியோ பொது சுகாதாரத் துறையின் தரவுகளின்படி, கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட 21 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இருப்பினும், பெருந்தொற்றின் உச்சக்கட்டத்தில் இருந்தது போன்ற ஒரு மோசமான சூழல் மீண்டும் ஏற்பட வாய்ப்பில்லை என்று தொற்றுநோய் நிபுணர் டாக்டர் ஐசக் போகோச் தெரிவித்துள்ளார்.
கோவிட் வைரஸ் இப்போது ஆண்டு முழுவதும் புழக்கத்தில் இருக்கும் ஒரு சாதாரண வைரஸாக மாறிவிட்டது, பெரும்பாலான மக்கள் ஏற்கனவே இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் பலரும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
இதனால் மக்கள் தொகையில் பெரும்பாலானோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) உருவாகியுள்ளதால், மருத்துவமனைகளில் மீண்டும் கூட்டம் அலைமோதும் நிலை ஏற்படாது என்று அவர் விளக்கியுள்ளார்.
ஆயினும், கோவிட் வைரஸின் ஆபத்து முற்றிலும் நீங்கிவிடவில்லை என்று எச்சரிக்கும் டாக்டர் போகோச், முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களை இந்த வைரஸ் இன்னும் கடுமையாக பாதிக்கக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒண்டாரியோவின் அண்மைய தரவுகளின்படி, மார்ச் மாத இறுதியில் 393 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 150-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்பு மருத்துவமனைகளில் கோவிட் நோயாளிகளுக்கென பிரத்யேக வார்டுகள் இருந்தன; ஆனால் இப்போது அது தினசரி மருத்துவ சிகிச்சையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.