கனடாவில் கொள்ளை முயற்சியின்போது கொல்லப்பட்ட இந்தியர்
கனடாவின் எட்மண்டன் நகரில் இந்தியர் ஒருவரைக் கொன்றதாக கனேடியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவில் ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள எட்மண்டன் நகரில், கொள்ளை முயற்சி ஒன்றின்போது இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
எட்மண்டனில் மதுபான விடுதி ஒன்றை நடத்திவரும் சுக்ஜீத் சிங் ரந்தாவா (48) என்பவர், புதன்கிழமை இரவு தனது விடுதியை மூடிக்கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் சிங் கடையில் கொள்ளையடிக்க முயன்றபோது, அவரை சிங் தடுக்க, அந்த நபர் சிங்கை தாக்கியுள்ளார்.
தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்தபோது, சிங் படுகாயமடைந்த நிலையில் கிடந்துள்ளார்.
முதலுதவி சிகிச்சைக்குப் பின் சிங்கை அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல, அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில், நிக்கோலஸ் (Nicholas Butler-Chowace, 22) என்னும் கனேடியரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அவர் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிங்கின் நண்பரான ரவி ப்ரகாஷ் என்பவர் கூறும்போது, சிங் கடையை மூடிக்கொண்டிருக்கும்போது, நிக்கோலஸ் அங்கு வந்து மதுபானம் திருட முயன்றதாகவும், அதை தடுத்த சிங் தாக்கப்பட்டதாகவும், தன் கடைக்குள்ளேயே அவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தங்களுக்கு சரியான பாதுகாப்பு இல்லை என்று கூறும் ரவி, தானும் சிறு தொழில் ஒன்றை நடத்தி வருவதாகவும், தானும் தனது ஊழியர்களும்கூட இதேபோல தாக்கப்பட்டுள்ளதாகவும், இதே நிலை தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார்.