கனடாவில் இந்திய மாணவர் படுகொலை: குடும்பத்துக்கு உருவாகியுள்ள புதிய கவலை
கையில் இருந்த பணத்தை எல்லாம் செலவு செய்தும், கடன் வாங்கியும்தான் பல குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புகிறார்கள்.
பிள்ளைகள் படித்து நல்ல வேலையில் அமர்ந்துவிட்டால் குடும்பம் ஒரு நல்ல நிலைக்கு வந்துவிடாதா என்னும் ஏக்கத்தில்தான் சொத்தை விற்றாவது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புகிறார்கள் பல பெற்றோர்.
ஆனால், வெளிநாடு சென்ற பிள்ளை சடலமாகத்தான் நாட்டுக்குத் திரும்பப்போகிறது என்ற தகவல் கிடைத்தால், அந்தக் குடும்பம் என்ன பாடுபடும்!
அப்படி ஒரு நிலையில்தான் இருக்கிறார்கள் மகனை கனடாவுக்கு மேல் படிப்புக்காக அனுப்பி வைத்த ஒரு இந்திய தம்பதியர்.
இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த குர்கிரத் சிங் (Gurkirat Singh Manocha, 26), மேல் படிப்புக்காக கனடா சென்றிருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை ஒரு கும்பல் அவரைத் தாக்கி படுகொலை செய்துள்ளது.

இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்திலுள்ள உஜ்ஜைன் என்னுமிடத்தைச் சேர்ந்த சிங், பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Northern Lights கல்லூரியில் முதுகலைப் பட்டயப்படிப்பு படித்துக்கொண்டிருந்தார்.
படித்துக்கொண்டே வால்மார்ட் பல்பொருள் அங்காடி ஒன்றில் பகுதி நேர வேலை பார்த்துக்கொண்டிருந்த சிங், இம்மாதம், அதாவது, மார்ச் மாதம் 14ஆம் திகதி, வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கும்போது, 10 முதல் 12 பேர் வரை கொண்ட ஒரு கும்பல் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளது.
மேலும், அவர் மீது வாகனம் ஒன்றையும் ஏற்றிச் சென்றுள்ளது அந்தக் கும்பல். படுகாயமடைந்த சிங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
விடயம் என்னவென்றால், ஏற்கனவே கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் சிங்குடைய குடும்பம், தற்போது அவருடைய உடலை இந்தியா கொண்டுவருவதற்கு பணமில்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறது.
சிங் 15 மாதங்களுக்கு முன்தான் கனடாவுக்குச் சென்றார். மகன் படித்து முடித்து வேலைக்குச் சென்று தங்களை கவனித்துக்கொள்வான் என அவரது பெற்றோர் எதிர்பார்ப்புடன் காத்திருக்க, இப்போது மகன் கொல்லப்பட்டுவிட்ட செய்தி அறிந்து அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர் அவரது பெற்றோர்.

கூடுதல் சிக்கல் என்னவென்றால், சிங்கின் உடலை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்காக, சுமார் 50 லட்ச ரூபாய் ஏற்பாடு செய்யுமாறு அவரது பெற்றோருக்கு கூறப்பட்டுள்ளதாம்.
பணத்துக்கு என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப்போயிருக்கும் சிங்கின் பெற்றோர், தங்கள் மாநில அரசிடம் உதவி கோரியிருக்கிறார்களாம்.