அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட இந்திய பெண் நிகிதா ; யுவதியின் தந்தை வெளியிட்ட புதிய தகவல்
அமெரிக்காவில் இந்திய பெண் ஒருவர் தனது முன்னாள் காதலனால் ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அண்மையில் பதிவாகிய நிலையில் ,உயிரிழந்த பெண் 27 வயதுடைய நிகிதா கோடிஷாலா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பெண்னை கொலை செய்த காதலன் இந்தியாவுக்கு தப்பி சென்ற்தாக கூறப்படும் நிலையில் சம்பவம் தொடர்பில் நிகிதாவின் தந்தை பல புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் காதலன் அல்ல...பணத்திற்காக கொலை
இந்தக் கொலையை அவரது முன்னாள் காதலன் செய்ததாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், அவரது தந்தை ஆனந்த் கோடிஷாலா, சந்தேக நபர் அவரது காதலன் அல்ல என்றும், முன்பு அவருடன் அதே வீட்டில் தங்கியிருந்த ஒருவர் என்றும் கூறுகிறார்.
மேலும் கொலைக்கான காரணம் பணத் தகராறுதான் என நிகிதாவின் தந்தை தெரிவித்துள்ளார். சந்தேக நபரான அர்ஜுன் சர்மா என்ற இளைஞன், நிகிதாவிடமிருந்து அவ்வப்போது பணம் பெற்று வந்துள்ளார். அவர் சமீபத்தில் 4,500 அமெரிக்க டொலர் வாங்கியுள்ளார், அதில் 3,500 அமெரிக்க டொலர் அவர் திருப்பிச் செலுத்தியதாகக் கூறப்படுகிறது.

பின்னர் அவர் மீண்டும் $1,000 கேட்டபோது அதற்கு நிகிதா மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அர்ஜுன் சர்மா பலரிடம் கடன் வாங்கி இந்தியாவுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்ததை நிகிதா அறிந்தாள், மேலும் பணத்தைத் திரும்பக் கேட்டபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவளை கத்தியால் குத்திக் கொன்றதாக அவளுடைய தந்தை குற்றம் சாட்டுகிறார்.
பின்னர் கடந்த 3 ஆம் திகதி சந்தேக நபரான அர்ஜுன் சர்மாவின் குடியிருப்பில் நிகிதாவின் உடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அர்ஜுன் சர்மாவை கைது செய்ய அமெரிக்க பொலிஸார் சர்வதேச காவல்துறையின் உதவியை நாடினர்.
அதேவேளை அர்ஜுன் சர்மா போலவே தோற்றமளிக்கும் ஒருவர் நேற்று தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டார், ஆனால் பின்னர் அவர் அர்ஜுன் சர்மா இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் தனது மகளின் உடலை விரைவில் நாட்டிற்குக் கொண்டுவர உதவுமாறும், குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்குமாறும் நிகிதாவின் தந்தை இந்திய மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாககவும் கூறப்படுகின்றது.