உங்கள் வேலைக்கு ஆபத்தா? ; AI பற்றி Sam Altman சொன்ன அந்த அதிர்ச்சி உண்மை
செயற்கை நுண்ணறிவான AI-யின் எதிர்கால வளர்ச்சி மற்றும் அது மனிதர்களின் பணிபுரியும் முறையில் ஏற்படுத்தவுள்ள மாற்றங்கள் குறித்து OpenAI நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் (Sam Altman) முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்தக் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். கடந்த ஓராண்டில் AI மற்றும் தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக சாம் ஆல்ட்மேன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனிதர்கள் கணினிகளுடன் நேரடியாக உரையாடும் நிலை தற்போது உருவாகியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இது ஒரு திரைப்படத்திற்குள் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவதாகவும், அறிவியல் புனைகதை நிஜமாக மாறியதைப் போன்ற தோற்றத்தைத் தருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், சாதாரண உரையாடலுக்கு அப்பாற்பட்டு, கணினிகளைப் பயன்படுத்தும் விதத்தையும், மனிதர்கள் பணிபுரியும் முறையையும் முற்றிலும் மாற்றியமைக்கக்கூடிய “மூன்றாம் கட்டத்திற்குள்” தற்போது நுழைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இணையம் ஆரம்பகாலத்தில் அறிமுகமானபோது மக்கள் அதனை எவ்வாறு படிப்படியாக ஏற்றுக்கொண்டார்களோ, அதேபோன்று தற்போதைய AI வளர்ச்சியையும் மக்கள் இயல்பாக ஏற்றுக்கொண்டு வருவதாக சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்.
மனிதர்களின் பணிபுரியும் பழக்கவழக்கங்களில் இயல்பான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு காலம் தேவைப்படுவதால், இந்த புதிய தொழில்நுட்பத்துடன் பழகுவதற்கும் மாற்றங்களை ஏற்றுக்கொள்வதற்கும் சிறிது காலம் எடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், இந்த ஆண்டின் இறுதிக்குள் பணிபுரியும் முறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படக்கூடும் என்றும், மனிதர்கள் வேலை செய்வதற்கு முற்றிலும் புதியதொரு முறை உருவாகும் சாத்தியம் உள்ளதாகவும் சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்.