கனடாவில் இணைய வழி சூதாட்டத்தினால் ஏற்பட்டுள்ள பெரும் பாதிப்பு
2022-இல் கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் ஆன்லைன் சூதாட்டச் சந்தை தனியார் நிறுவனங்களுக்கு விரிவாக்கப்பட்டதைத் தொடர்ந்து, சூதாட்ட அடிமைத்தனக் கோளாறு காரணமாக மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவுகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இருமடங்காக (99%) அதிகரித்துள்ளதாகப் புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இதில் குறிப்பாக 10 முதல் 29 வயதுடைய இளம் ஆண்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வட யார்க் பொது மருத்துவமனையின் குடும்ப மற்றும் சமூக மருத்துவ ஆராய்ச்சித் தலைவரும், இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியருமான டாக்டர் டேனியல் மைரன் இது குறித்து தகவல் வெளியிட்டுள்ளார்.

ஆன்லைன் சூதாட்டம் அறிமுகமான உடன் திடீர் உயர்வு ஏற்படவில்லை என்றாலும், காலப்போக்கில் படிப்படியாக அதிகரித்து தற்போது 99 சதவீத உயர்வை எட்டியுள்ளது என்றார்.
விளையாட்டுப் பந்தயங்கள் மற்றும் அவற்றை மையமாகக் கொண்ட தீவிர விளம்பர உத்திகள் குறிப்பாக இளம் ஆண்களைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மேலும், நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளின் போது உடனுக்குடன் பந்தயம் கட்டும் வசதிகள் போன்றவை இளைஞர்களை இதன் பக்கம் சுலபமாக ஈர்க்கின்றன.
சூதாட்டப் பிரச்சினையால் பாதிக்கப்படுபவர்கள் சமூகப் பழியுரைக்கு அஞ்சித் தொடக்கத்திலேயே சிகிச்சை பெற முன்வருவதில்லை. உடல்நலமும் சமூக வாழ்க்கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பின்னரே அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவை நாடுகின்றனர்.
சூதாட்டக் கோளாறுகளுக்காக அவசர சிகிச்சை பிரிவுக்கு வந்தவர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் மனநலப் பிரச்சினைகள் அல்லது தீவிர போதைப்பொருள் பயன்பாட்டினாலும் பாதிக்கப்பட்டிருந்தனர்.
அவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மருத்துவமனையில் உள்நோயாளிகளாகவே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தகைய கடுமையான சூதாட்ட அடிமைத்தனத்திற்கு உள்ளானவர்களுக்கு தற்கொலை எண்ணங்கள் மற்றும் தீவிர மனநலப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் மிகவும் அதிகம் என்பதால், உடனடி கட்டுப்பாடுகளும் விழிப்புணர்வும் அவசியமாகின்றன.