ஐநா பொதுச்செயலாளருடன் அனைத்து உறவுகளையும் துண்டித்தது இஸ்ரேல்
மோதல் நடைபெறும் பகுதிகளில் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் நாடுகளின் ‘கருப்புப் பட்டியலில்’ தங்களையும் இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸுடன் உள்ள அனைத்து தொடர்புகளையும் துண்டித்துக் கொள்வதாக இஸ்ரேல் அதிரடியாக அறிவித்துள்ளது.
இது குறித்து ஐநா-வுக்கான இஸ்ரேல் தூதர் டேனி டானோன் எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "இந்த பொதுச்செயலாளருடன் எங்களுக்குள்ள உறவு முடிந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலைக் கருப்புப் பட்டியலில் சேர்த்து, பாலியல் வன்கொடுமையை ஒரு போர்க் கருவியாகப் பயன்படுத்துவதாக எங்கள் மீது குற்றம் சாட்டுவது முற்றிலும் கொடூரமான முடிவாகும்," என்று சாடியுள்ளார்.

மேலும், பொதுச்செயலாளரும் அவரது குழுவினரும் இஸ்ரேலுக்கு எதிராகத் தொடர்ந்து பொய்களைப் பரப்புவதாகவும், தங்களையும் ஹமாஸ் பயங்கரவாதிகளையும் ஒரே பட்டியலில் வைப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தோனியோ குட்டெரெஸ் ஐநா அமைப்பின் தலைவராகப் பொறுப்பில் இருக்கும் வரை, அவரது அலுவலகத்துடன் எந்தவொரு தொடர்பும் வைத்துக்கொள்ளப் போவதில்லை என்று இஸ்ரேல் தூதரகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள குட்டெரெஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், இஸ்ரேல் தூதரின் கருத்துக்கள் தங்களுக்குத் தெரியும் என்றும், எனினும் தங்களைப் பொறுத்தவரை பொதுச்செயலாளரின் கதவுகள் எப்போதுமே பேச்சுவார்த்தைக்குத் திறந்தே இருக்கும் என்றும் கூறியுள்ளார்.