40 மில்லியன் டொலர் மதிப்பிலான தங்கத்துடன்: சிஐஏ உயர் அதிகாரி கைது
அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ இன் முன்னாள் உயர் அதிகாரி ஒருவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், சுமார் 40 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான தங்கக் கட்டிகள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தில் உள்ள டேவிட் ரஷ் என்பவரது வீட்டில், இந்த மாத தொடக்கத்தில் எஃப்பிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
அங்கிருந்து தங்கக் கட்டிகள் மட்டுமன்றி, 2 மில்லியன் டாலர் ரொக்கப் பணம் மற்றும் சுமார் 35 ஆடம்பரக் கடிகாரங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

விசாரணை அதிகாரிகளின் தகவல்களை மேற்கோள் காட்டி, நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனம் இந்த நபர் முன்னாள் சிஐஏ உயர் அதிகாரி என்பதை புதன்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.
நீதிமன்ற பிரமாணப் பத்திரத்தின்படி, கடந்த ஆண்டு நவம்பர் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை, டேவிட் ரஷ் தனது அலுவலகப் பணிகளுக்காக "அதிக அளவிலான வெளிநாட்டு நாணயம் மற்றும் பல மில்லியன் டாலர் மதிப்பிலான தங்கக் கட்டிகள் தேவை" என தனது நிறுவனத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது கோரிக்கையை ஏற்று, அந்தப் பணமும் தங்கமும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால், அவர் எதற்காக அவற்றைக் கேட்டார் என்ற கூடுதல் விவரங்கள் ஏதும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
இதற்கிடையில், அவரது அலுவலகக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த அந்தத் தங்கக் கட்டிகளும் பெரும் பகுதி ரொக்கப் பணமும் காணாமல் போனது அதிகாரிகளுக்குத் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அவரது வர்ஜீனியா வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 303 தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அவற்றின் தற்போதைய சந்தை மதிப்பு 40 மில்லியன் டாலருக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. எஃப்பிஐ நடத்திய விரிவான விசாரணையில், டேவிட் ரஷ் தனது வேலைவாய்ப்பு விண்ணப்பத்தில் கல்வித் தகுதி மற்றும் ராணுவப் பின்னணி குறித்து முற்றிலும் தவறான தகவல்களை வழங்கியிருந்தது அம்பலமாகியுள்ளது.
அவர் பல்கலைக்கழகப் பட்டங்களைப் பெற்றதாகவும், அமெரிக்க கடற்படையில் விமானியாகப் பணியாற்றியதாகவும் பொய் கூறியுள்ளார். அவர் கடற்படையின் உறுப்பினராக இருப்பதாகப் பொய் கூறி, போலியான நேர அட்டவணைகளை சமர்ப்பித்து, ராணுவ விடுப்பு ஊதியமாக 77,000 டாலர்களை ஏமாற்றிப் பெற்றுள்ளார்.
அரசாங்கத்தின் மிக உயர்மட்ட ரகசிய அனுமதிகளையும் , வகைப்படுத்தப்பட்ட ரகசிய ஆவணங்களை அணுகும் உரிமையையும் பெற்றிருந்த இந்த முன்னாள் அதிகாரி, மே 19 அன்று அதிகாரப்பூர்வமாகக் கைது செய்யப்பட்டார். அவர் மீது ‘அரசாங்கப் பணத்தைத் திருடியது’ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.