இத்தாலி முன்மொழிந்த திட்டம்: ரஷ்யா கடும் விமர்சனம்
உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட 'உக்ரைனுக்கான அமைதித் திட்டம்' ஒன்றை இத்தாலி முன்மொழிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் 'இந்த திட்டம் வெறும் கற்பனையாகவே போய்விடும்' என்று ரஷ்யாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மரியா ஜகரோவா இன்று (25-05-2022) விமர்சித்துள்ளார்.
முன்னதாக கடந்த வாரம், இத்தாலிய வெளியுறவு மந்திரி லூய்கி டி மாயோ, உக்ரைனில் அமைதியை நிலைநாட்டும் முயற்சியாக அமைதி திட்டம் குறித்த விரிவான வரையறைகளை விளக்கினார்.
மேலும், நியூயோர்க்கிற்கு பயணம் செய்திருந்த ஐ.நா.சபையின் பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்ரெஸ் உடன் அவர் இது தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.
இந்த நிலையில் தான், இந்த திட்டம் ஒரு கற்பனை மட்டுமே என்று ரஷ்யா விமர்சித்துள்ளது.
ரஷ்யா தரப்பில் கூறப்பட்டதாவது, இத்தாலியின் திட்டம் குறித்த முன்முயற்சியை இன்னும் நாங்கள் பார்க்கவில்லை.
ஆனால் ராஜாங்க வழிகள் மூலம் அதைப் பெறுவோம் என்று நம்புகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக, ரஷ்ய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மரியா ஜகரோவா கூறியதாவது,
"நீங்கள் (இத்தாலி) ஒரு கையால் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி கொண்டு, மறுபுறம் நிலைமையை அமைதியான முறையில் தீர்க்கும் திட்டங்களைக் கொண்டு வர முடியாது.
எந்தவொரு மேற்கத்திய திட்டத்தையும் ரஷ்யா கைப்பற்றும், அதனை பின்பற்றும் என்று அவர்கள் நம்பினால், அவர்கள் எங்களை பற்றி அதிகம் புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம்" எனத் தெரிவித்துள்ளார்.