வழக்கு விசாரணையின்போது சுட்டுக்கொல்லப்பட்ட நீதிபதி
அல்பேனியாவின் தலைநகர் டிரானாவில் உள்ள நீதிமன்றமொன்றில் நேற்று (7) நடந்த சொத்துத் தகராறு தொடர்பான வழக்கு விசாரணையின்போது நீதிபதியொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
விசாரணை நடந்துகொண்டிருந்தபோதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், நீதிபதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
மேலும் இருவர் காயம்
இந்தச் சம்பவத்தில் வழக்கில் தொடர்புடைய தந்தை மற்றும் மகன் என மேலும் இருவர் காயமடைந்த போதிலும் அவர்களின் உயிருக்கு ஆபத்தில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தநிலையில், 30 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் உடனடியாகக் கைது செய்தனர். வழக்கில் தோல்வியடைவோம் என அஞ்சியதால் சந்தேகநபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அல்பேனிய பிரதமர் எடி ரமா, இந்தத் தாக்குதலைக் கண்டித்ததோடு, நீதிமன்றங்களில் பாதுகாப்பை பலப்படுத்தவும், சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருப்போருக்கு கடுமையான தண்டனை வழங்கவும் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 35 ஆண்டுகளில் பணியின் போது நீதிபதியொருசவர் கொல்லப்படுவது இதுவே முதல் தடவை என எதிர்க்கட்சித் தலைவர் சாலி பெரிஷா தெரிவித்துள்ளார்.
சம்பவம் துப்பாக்கிதாரியின் உறவினர் ஒருவரும் நீதிமன்றத்தின் பாதுகாப்பு அதிகாரியொருவரும் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.