கனடாவிலிருந்து படகு மூலம் அமெரிக்காவிற்குள் மனிதக் கடத்தலில் ஈடுபட்டவர் கைது
கனடாவிலிருந்து நயாகரா ஆறு வழியாக ஒரு குடும்பத்தினரை சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் அழைத்து சென்ற மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த 27 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க அரசு வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்டுள்ள இந்தச் சம்பவத்தின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஆண்ட்ரெஸ் காரிலோ-ஹெர்னாண்டஸ் (Andres Carrillo-Hernandez). என்ற மெக்சிகோ பிரஜையின் மீது இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

மார்ச் 15 அன்று, கனடாவின் போயர்ஸ் கிரீக் (Boyers Creek) கடற்கரையிலிருந்து ஒரு சிறிய படகு (Raft) மூலம் ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தையை ஏற்றி சென்று, அமெரிக்காவின் கிராண்ட் ஐலேண்ட் (Grand Island) பகுதியில் உள்ள வெஸ்ட் ரிவர் சாலைக்கு அருகே இறக்கிவிட்டுள்ளார்.
இந்தத் தொழிலுக்காக அந்தக் குடும்பத்தினரிடமிருந்து தனக்கு 2,000 அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டதை காரிலோ-ஹெர்னாண்டஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.
கடத்தப்பட்ட அந்தக் குடும்பத்தினர் பிரிட்டன் (UK) மற்றும் அயர்லாந்து நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அனுமதியின்றி அமெரிக்காவிற்குள் நுழைந்ததற்காக அவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். காரிலோ-ஹெர்னாண்டஸ் மீது 'அந்நியர்களைக் கடத்துதல்' (Alien smuggling) என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இவர் அமெரிக்க நீதிபதி ஜெர்மியா ஜே. மெக்கார்த்தி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இது குறித்த அடுத்தகட்ட விசாரணை மார்ச் 24-ஆம் திகதி நடைபெற உள்ளது.