கனடாவில் பயங்கரம்: கரடி தாக்கியதில் 25 வயது இளைஞர் பலி!
சாஸ்காட்டூன் நகருக்கு வடகிழக்கே சுமார் 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ள 'பாயிண்ட்ஸ் நார்த்' என்ற தொலைதூர விமான ஓடுதளம் அருகே கடந்த வெள்ளிக்கிழமை இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
25 வயதான இளைஞர் ஒருவர் கரடியுடன் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்ததாக அந்நாட்டு சமூக பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
மே 8-ஆம் திகதி மாலை 6:30 மணியளவில் இந்த உயிரிழப்பு குறித்து தகவல் கிடைத்ததாக ராயல் கனடியன் மவுண்டட் போலீஸ் தெரிவித்துள்ளது.

இது விபத்தாகக் கருதப்படுவதால், குற்றவியல் விசாரணை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும், வனப்பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் 'வனவிலங்கு-மனிதத் தாக்குதல் தடுப்புப் பிரிவு' இது குறித்து விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
தாக்குதல் நடத்திய அந்த கரடி சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டது. அதன் உடல் சாஸ்காட்டூனில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அங்கு கரடியின் உடல் கூறாய்வு செய்யப்பட்டு, தாக்குதலுக்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்படும். வனப்பகுதிகளில் கரடிகளைச் சந்தித்தால் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கரடியைக் கண்டால் அதனிடம் இருந்து விலகிச் செல்ல வேண்டும், அமைதியான குரலில் பேச வேண்டும்; கரடியின் கண்களை நேரடியாகப் பார்க்கக் கூடாது, பெரும்பாலான வனவிலங்குகள் மனித இடையூறு இல்லையெனில் தானாகவே நகர்ந்து சென்றுவிடும் என்பதால், அவற்றுக்கு வழி விடுவது அவசியம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு சமூக பாதுகாப்பு அமைச்சு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்கள் விசாரணையின் முடிவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.