ரஷ்யாவில் பாரிய பெற்றோல் தட்டுப்பாடு ; வரிசையில் காத்திருக்கும் மக்கள்
ரஷ்யாவில் வரலாறு காணாத அளவுக்கு பெற்றோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அண்மையில் உக்ரைன் இராணுவம் ரஷ்யாவில் உள்ள 50க்கும் மேற்பட்ட பெற்றோல் மற்றும் டீசல் உற்பத்தி நிலையங்களை தாக்கியதைத் தொடர்ந்து, நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதுடன், பல பகுதிகளில் பெற்றோல் விநியோகத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் மக்களின் வசதிக்காக நடமாடும் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ரஷ்யாவில் நாளொன்றுக்கு சுமார் 1,10,000 தொன் பெற்றோல் தேவைப்படுவதாகக் கூறப்படும் நிலையில், அந்தத் தேவையை பூர்த்தி செய்வதற்காக பெலாரஸ், இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து எரிபொருளை இறக்குமதி செய்ய ரஷ்யா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இந்தத் தகவல்கள் தொடர்பாக ரஷ்ய அதிகாரிகள் தரப்பில் விரிவான உத்தியோகபூர்வ விளக்கம் இதுவரை வெளியாகவில்லை.