ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் பில் கேட்ஸ்; மெலிண்டா கவலை
அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் தனது முன்னாள் கணவர் பில் கேட்ஸின் பெயர் மீண்டும் அடிபடுவது, தனது திருமண வாழ்க்கையின் "வலிகரமான நினைவுகளை" மீட்டுவதாக பில் கேட்ஸின் முன்னாள் மனைவி மெலிண்டா கவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் நேர்காணல் ஒன்றில் பேசிய மெலிண்டா, "இந்த அழுக்குகளிலிருந்து நான் விலகி இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் எனது முன்னாள் கணவர் தான் பதிலளிக்க வேண்டும், நான் அல்ல என தெரிவித்தார்.

இதுவரை எந்தவொரு பாலியல் குற்றச்சாட்டும் இல்லை
27 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு, 2021 ஆம் ஆண்டு பில்கேட்ஸ் தம்பதியினர் விவாகரத்து பெற்ற நிலையில், எப்ஸ்டீனுடனான பில் கேட்ஸின் தொடர்பே இந்த பிரிவுக்கு ஒரு முக்கிய காரணம் என அப்போதே ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
அதேவெளை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள 3 மில்லியன் ஆவணங்களில் பில் கேட்ஸ் குறித்துக் கூறப்பட்டுள்ளவை, பில் கேட்ஸிற்குப் பாலியல் தொற்று நோய் இருந்ததாகவும், அதனை அவர் மறைக்க முயன்றதாகவும் எப்ஸ்டீன் தனது மின்னஞ்சல்களில் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யப் பெண்களுடனான தொடர்புகள் மற்றும் பில் கேட்ஸிற்காக மருந்துகளைப் பெற்றுக்கொடுத்தமை குறித்து எப்ஸ்டீன் எழுதியதாகக் கூறப்படும் மின்னஞ்சல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், இவை பில் கேட்ஸிற்கு அனுப்பப்பட்டதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. அதேவேளை இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் "முற்றிலும் அபத்தமானவை மற்றும் பொய்யானவை" என பில் கேட்ஸின் செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளார்.
"எப்ஸ்டீன் ஒரு பொய்யர். பில் கேட்ஸுடன் அவருக்குத் தொடர்ச்சியான நட்பு இல்லாததால் ஏற்பட்ட ஏமாற்றத்தையே இந்த ஆவணங்கள் காட்டுகின்றன," என அவர் மேலும் தெரிவித்தார்.
அதேசமயம் பில் கேட்ஸ் மீது இதுவரை எந்தவொரு நேரடிப் பாலியல் குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை என்பதும், ஆவணங்களில் பெயர் இருப்பது அவர் குற்றவாளி என்பதற்கு ஆதாரமாகாது என்பதும் குறிப்பிடத்தக்கது.