மத்திய கிழக்கு வெடிக்கும் நிலையா? ஈரான்–ஹிஸ்புல்லா கூட்டணி எச்சரிக்கை
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலில் ஈரானும் ஹிஸ்புல்லாவும் இணைந்து ஒரே முன்னணியாகச் செயற்படுவதை உறுதிப்படுத்தியுள்ளன.
அமெரிக்காவின் போர் நிறுத்த முன்மொழிவுக்கு ஈரான் வழங்கியுள்ள பதிலின் மூலம் இது வெளிப்பட்டுள்ளதாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன.
லெபனான் மீதான தாக்குதல்களை நிறுத்துவது மற்றும் ஈரானின் நட்பு நாடுகளுக்கு எதிரான பிராந்தியப் போரை முடிவுக்குக் கொண்டுவருவது ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு விரிவான பிராந்திய உடன்படிக்கையையே ஈரான் கோருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

லெபனான் அரசாங்கம் முன்வைக்கும் தனிப்பட்ட போர் நிறுத்தக் கோரிக்கைகளை ஈரான் நிராகரித்துள்ளதுடன், பிராந்திய ரீதியிலான பேச்சுவார்த்தையின் மூலமே தமக்கு அதிக செல்வாக்கு கிடைக்கும் என ஈரான் நம்புகிறது.
அதேவேளை, இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகளை நிலைகுலையச் செய்யும் நோக்கில், ஈரானும் ஹிஸ்புல்லாவும் ஒருங்கிணைந்து ஏவுகணைத் தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலிய அதிகாரிகள் இந்த இரு முனைகளையும் ஒன்றாகப் பார்க்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர். ஈரானுடனான போர் முடிவுக்கு வந்த பின்னரே லெபனான் விவகாரம் தமக்கு முதன்மையானதாக மாறும் என அவர்கள் மீண்டும் மீண்டும் தெரிவித்துள்ளனர்.
தற்போது தெற்கு லெபனான் ஒரு போர்க்களமாக மாறியுள்ள நிலையில், எல்லையூடாக ஹிஸ்புல்லா அமைப்பினர் தொடர்ச்சியாக ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இவற்றில் சில இஸ்ரேலினால் இடைமறிக்கப்பட்டாலும், சில ஏவுகணைகள் இஸ்ரேலுக்குள் சேதங்களை ஏற்படுத்தியுள்ளன.
ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலியக் குடியிருப்புகள் மீது ஏவுகணைகளை ஏவுவதைத் தடுக்கும் வகையில், தற்போது அந்த எல்லைப் பகுதியைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இஸ்ரேலியப் படைகள் லெபனானுக்குள் ஊடுருவி வரும் நிலையிலும் ஹிஸ்புல்லாவின் ஏவுகணை தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளதாகவும் அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன.