கனடாவில் ஆசியர்களுக்கு எதிராக நடந்த சம்பவம்: சிக்கிய தம்பதி
பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஆசிய நாட்டவர்களுக்கு எதிராக இனவாத தாக்குதல் முன்னெடுத்த இருவர் மீது வழக்கு பதிந்துள்ளதாக ரிச்மண்ட் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய சம்பவம் கடந்த மார்ச் மாதம் Steveston பகுதியில் அமைந்துள்ள Rocanini தேநீர் விடுதி ஊழியர்கள் மீது நடந்துள்ளது.
சம்பவத்தன்று சுமார் 3.15 மணியளவில் பொலிசாருக்கு இந்த விவகாரம் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது. மட்டுமின்றி, சமூக ஊடக பக்கத்திலும் வீடியோ ஒன்று இது தொடர்பில் வெளியானது.
அதில், அந்த தேநீர் விடுதி ஊழியர் வாடிக்கையாளர்களிடம் தனி மனித இடைவெளியை பின்பற்ற கோரியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஒரு தம்பதி, தேநீரை கொட்டியதுடன், சீனர்கள் என கூறி ஆபாசமாக திட்டியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் தற்போது Astrid Maria Secreve மற்றும் Michel Jean-Jacque Berthaume ஆகிய இருவர் மீதும் தகாதமுறையில் நடந்து கொண்டதாக கூறி வழக்கு பதியப்பட்டுள்ளது.
இதனிடையே, நமது சமூகத்தில் வெறுப்புக்கு இடமில்லை எனவும், ஒவ்வொரு சம்பவத்தையும் முழுமையாக விசாரிக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் எனவும் ரிச்மண்ட் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சாத்தியமான குற்றங்களுக்கு கண்டிப்பாக குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வோம் எனவும் தெரிவித்துள்ளனர்.