பிரிட்டனில் புதிதாக 71 பேருக்கு மங்கி பொக்ஸ்
பிரிட்டனில் புதிதாக 71 பேருக்கு மங்கி பொக்ஸ் (குரங்குஅம்மை) நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் தற்போது பல நாடுகளில் மங்கி பொக்ஸ் நோய் பாதிப்பு பரவி வருகிறது.
ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் காணப்பட்ட மங்கி பொக்ஸ் தற்போது அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பரவி வருகிறது. இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பிரிட்டன், ஸ்பெயின், போர்த்துக்கல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 பேருக்கு மங்கி பொக்ஸ் பாதித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
இதுகுறித்து பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில், பிரிட்டனில் 71 பேருக்கு புதிதாக மங்கி பொக்ஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், கடந்த 7ஆம் திகதியில் இருந்து இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 179 ஆக உயர்ந்துள்ளதாக ஸ்கை நியூஸ் தெரிவித்துள்ளது. அதேசமயம் புதிய பாதிப்புகள் காணப்பட்டாலும், பொதுமக்களுக்கு ஆபத்து குறைவே என்றும் தெரிவித்துள்ளது. எனினும், நோய் பாதித்தவர்கள் தொடர்ந்து 21 நாட்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர, பெரிய அம்மை தடுப்பூசியையும் அந்நாட்டு சுகாதார அமைப்பு பாதுகாப்பிற்காக இருப்பு வைத்துள்ளது. இதனை மங்கி பொக்ஸ் பாதித்தவருடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களுக்கு செலுத்துவதற்காக இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இதன் காரணமாக, அறிகுறியுடன் கூடிய தொற்று மற்றும் கடுமையான பாதிப்புக்கான ஆபத்து குறையும் எனவும் குறிபிட்டுள்ளது.