உயிரிழந்த நபருக்காக கண்ணீர் சிந்திய குரங்கு! இலங்கையில் மனதை உருகவைத்த சம்பவம்
மட்டக்களப்பு தாளங்குடா பிரதேசத்தில் உயிரிழந்த நபர் ஒருவருக்கு குரங்கொன்று கண்ணீருடன் அஞ்சலி செலுத்தும் நெகிழ்ச்சி சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
தாளங்குடா பிரதேசத்தினைச் சேர்ந்த 56 வயதுடைய பீதாம்பரம் ராஜன் என்ற நபர் மரணித்துள்ளார்.
இவர் காட்டிலிருந்துவந்த குரங்கு ஒன்றிற்கு தினமும் பிஸ்கட் வழங்கி வந்துள்ளார்.
இந்த நிலையில் பீதாம்பரம் ராஜன் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (17-10-2022) இரவு சுகயீனம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.
உடலை வீட்டில் அஞ்சலிக்காக வைத்திருந்தபோது, தனக்கு உணவளித்து வந்தவர் சடலமாக படுத்திருப்பதை பார்த்த குரங்கு அவரின் பக்கம் சென்று அவருக்கு சுவாசம் உள்ளதா என பரிசோதித்ததுடன், அவரின் சட்டையை பிடித்து இழுத்து அவரை எழுப்ப பல முயற்சிகளை செய்ததாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், பின்னர் அவர் மரணித்திருப்பதை அறிந்த குரங்கு கண்ணீர் சிந்தியதுடன், அவரை முத்தமிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளது.