40 இலட்சத்தை கடந்தது கொரோனா உயிரிழப்புகள்
உலகளாவிய ரீதியில் நேற்றுடன் பதிவான கொரோனா உயிரிழப்புகள் 40 இலட்சம் என்ற மைல்கல்லை கடந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், பல நாடுகள் தங்கள் மக்களை காப்பாற்ற தடுப்பூசிகளை வாங்க போராடுகின்றன. அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் புதிய தொற்றாளர்கள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டாலும், டெல்டா உருமாறிய கொரோனா வைரஸ் உலகெங்கிலும் ஆதிக்கம் செலுத்துவதால் பல நாடுகளில் பற்றாக்குறையும் காணப்படுகிறது. இதனால் பாதிப்பு அதிகரிக்க கூடிய ஆபத்து ஏற்பட்டு உள்ளது.
ராய்ட்டர்ஸ் புள்ளிவிபரங்களின் படி, உலகளாவிய ரீதியில் கொரோனா உயிரிழப்புகள் 20 இலட்சத்தை எட்ட ஒரு வருடம் ஆனதாகவும், அடுத்த 20 இலட்சம் வெறும் 166 நாட்களிலே ஆனதாவும் தெரியவருகிறது.
மேலும் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் சுமார் 50 சதவீதமானவை அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா மற்றும் மெக்ஸிகோ ஆகிய ஐந்து நாடுகளில் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.