கனடாவில் பொதுமக்களுக்கு சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள குவெல்ஃப் பகுதியில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு காகத்தில் வெஸ்ட் நைல் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், நுளம்புகள் மூலம் பரவும் இந்த நோய் மீண்டும் கனடாவில் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டியதில்லை என தொற்றுநோய் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏனெனில், இந்த வைரஸ் ஒவ்வொரு கோடைக்காலத்திலும் காணப்பட்டாலும், நுளம்பு கடியால் பாதிக்கப்படும் பெரும்பாலானோருக்கு எந்த அறிகுறிகளும் ஏற்படுவதில்லை என்று அவர்கள் விளக்கியுள்ளனர்.

கனடா சுகாதாரத்துறையின் தகவலின்படி, நாட்டில் உள்நாட்டிலேயே பரவும் முக்கியமான நுளம்பு மூலம் பரவும் நோயாக வெஸ்ட் நைல் வைரஸ் தொடர்கிறது. பாதிக்கப்பட்ட பறவைகளை கடித்த நுளம்புகள் பின்னர் மனிதர்களைக் கடிப்பதன் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது.
கனடாவின் பொது சுகாதார முகமை வெளியிட்டுள்ள தகவலின்படி, குறிப்பாக காகங்கள், ரேவன், ஜே மற்றும் மேக்பை போன்ற பறவைகள் இந்த வைரஸின் இயற்கை சேமிப்பிடங்களாக செயல்படுகின்றன. மனிதர்களும் குதிரைகளும் தற்செயலாக பாதிக்கப்படும் உயிரினங்களாகக் கருதப்படுகின்றனர்.
கனடாவில் ஒவ்வொரு ஆண்டும் வெஸ்ட் நைல் வைரஸ் தொற்றுகள் பதிவாகின்றன என குயின்ஸ் பல்கலைக்கழக தொற்றுநோய் பிரிவின் தலைவர் டாக்டர் ஜெரால்ட் எவன்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், அண்மைய ஆண்டுகளில் அறிகுறிகளுடன் பதிவான பெரும்பாலான நோயாளிகள் அல்பெர்டா, சாஸ்கட்சுவான் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா உள்ளிட்ட மேற்கு கனடா மாகாணங்களில் இருந்ததாகவும், ஒன்டாரியோவில் ஒப்பீட்டளவில் குறைவான சம்பவங்களே பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த வைரஸ் முதலில் பறவைகளுக்குள் பரவி, பின்னர் நுளம்புகளின் மூலம் மனிதர்களுக்கு பரவுவதால், கோடைக்காலத்தின் நடுப்பகுதி முதல் இறுதி பகுதி வரை தொற்று அபாயம் அதிகமாக இருக்கும் எனவும் அவர் விளக்கினார்.